முதலமைச்சரை காப்பாற்ற கூட்டணி கட்சிகள் முயற்சி - பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

திமுக அரசின் முடிவுகளுக்கு தமிழக மக்களிடம் கடும் எதிர்ப்பு எழும்போதெல்லாம், முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல் நடந்து விட்டது என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் முயற்சிப்பதாக பாஜக எம்.எல்.ஏ வானதிசீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.


பாஜக மகளிரணி தேசியத் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

திருமண மண்டபங்கள், விருந்து நிகழ்ச்சிகளில் மதுபானங்களை விநியோகிக்க சிறப்பு அனுமதி அளிக்கும் அரசாணையை, ஒரே நாளில் தி.மு.க., அரசு திரும்பப் பெற்றுள்ளது. அதுபோல, 12 மணி நேரம் வேலை சட்டத்தையும் நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த இரண்டு ஆண்டுகளில் இது போல ஓர் அறிவிப்பை, ஓர் உத்தரவை ஓர் அரசாணையை வெளியிட்டுவிட்டு திரும்பப் பெறுவது ஏற்கனவே நடந்திருக்கிறது. திமுக அரசின் நிர்வாக சீர்கேடுகளுக்கு இதை விட சிறந்த உதாரணம் எதுவும் இருக்க முடியாது.

திருமண மண்டபங்களில், விருந்து நிகழ்ச்சிகளில் மதுபானங்களுக்கு அனுமதி என்ற முடிவை, தமிழ் கலாசாரத்தை நன்கறிந்த ஒருவரால் நிச்சயமாக எடுத்திருக்கவே முடியாது. ஏழை, நடுத்தர குடும்பங்களின் வாழ்வியலை அறிந்திராத ஓர் அரசு தமிழ்நாட்டில் இருக்கிறது என்பதற்கு இந்த அரசாணையே சிறந்த எடுத்துக்காட்டு. தமிழ் மக்களிடம் ஏற்பட்ட கடும் கொந்தளிப்பு, திமுக அரசை பணிய வைத்திருக்கிறது.

ஒரு பக்கம் சட்டப்பேரவையில் 500 மதுக் கடைகளை குறைப்போம் என்று அறிவித்துவிட்டு, மறுபக்கம், மதுவை ஆறாக ஓட விடும் திட்டத்தை அறிவித்து மக்களை முட்டாள் ஆக்க நினைத்துள்ளது திமுக அரசு. இது தகவல் தொழில்நுட்ப புரட்சி யுகம். இப்போது, எந்தவொரு ஏமாற்று வேலையும் மக்களிடம் எடுபடாது. உண்மையை ஒரு நொடியில் மக்கள் உணர்ந்து விடுவார்கள்.

திமுக அரசின் முடிவுகளுக்கு தமிழக மக்களிடம் கடும் எதிர்ப்பு எழும்போதெல்லாம், முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியாமல் நடந்து விட்டது என்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் முயற்சித்து வருகின்றன. இதற்காக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை விடுப்பது, கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து முதலமைச்சருக்கு வக்காலத்து வாங்குவது என்று ஒரு நாடகத்தை ஒவ்வொரு முறையும் அரங்கேற்றி வருகின்றனர்.

வரும் லோக்சபா தேர்தலில் திமுகவிடம் இருந்து அதிக தொகுதிகளை பெற வேண்டும், கடந்த லோக்சபா தேர்தலைப் போலவே திமுகவிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் பெற வேண்டும் என்ற கவலை, திமுகவின் கூட்டணி கட்சிகளுக்கு இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக மக்களை ஏமாற்ற நினைத்தால் அது இனி எடுபடாது.

முதலமைச்சருக்கு தெரியாமல் நடந்துவிட்டது என்றால், தமிழகத்தில் உள்ள, திமுக அரசு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இயங்குகிறதா? அல்லது வெளியில் இருந்து வேறு சில சக்திகள் அரசை இயக்குகிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின்தான் பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

நீட் எதிர்ப்பு ரயில் மறியல் முயற்சி: 20-க்கும் மேற்பட்ட திராவிடத் தமிழர் கட்சியினர் கைது

நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீட் எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் திராவிடத் தமிழர் கட்சியினர் ரயில் மறி...

அதிமுகவில் யாரும் நீடிக்க மாட்டார்கள்; கொடநாடு வழக்கை விரைவாக விசாரிக்க முதல்வரிடம் மனு -கோவையில் புகழேந்தி

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்துள்ள புகழேந்தி, அதிமுக முற்றிலும் சிதைந்து வி...

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...