திருமணமானவர்கள் அதிமுக - பாஜகவை போல் இருந்து விடக் கூடாது:உதயநிதி ஸ்டாலின் அறிவுரை

கோவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திமுக சார்பில் 70ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி மணமக்களை வாழ்த்தியதோடு, திருமணமான நீங்கள் அதிமுக, பாஜக போல் இருந்துவிடக் கூடாது என அறிவுரை வழங்கினார்.



கோவை: கோவையில் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் 70வது ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி மணமக்களை வாழ்த்தினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7வது பிறந்த நாளை முன்னிட்டு ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் 70 ஜோடிகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து புதுமண தம்பதிகளை வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நான் விழா பேருரை ஆற்றவில்லை, சிற்றுரையும், வாழ்த்துரையும் மட்டுமே ஆற்றுகிறேன், இவ்விழாவினை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்கு அனைத்து பெருமைகளும் அமைச்சர் செந்தில் பாலாஜியையே சாரும்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் மாவட்டத்திற்கு அமைச்சராக இருக்கிறார். கோவை மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சராக இருக்கிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் நாம் தோல்வியுற்றோம் அதனைத் தொடர்ந்து கழகத் தலைவர், அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை மாவட்டத்திற்குப் பொறுப்பு அமைச்சராக நியமித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி ஆற்றிய கழகப் பணிகளால், கோவையில் உள்ளாட்சித் தேர்தலில் 90 சதவிகித வெற்றி பெற்றுத் தந்திருக்கிறாரென்றால் அதன் முழு பெருமையும், உழைப்பும் செந்தில் பாலாஜியையே சாரும்.

முதலமைச்சரின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு 70 ஜோடிகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது 81 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒவ்வொரு ஜோடிக்கும், அவரவர் குடும்ப முறைப்படி தாலி வாங்கிக் கொள்ள தொகை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கல்யாண சீர்வரிசைகள் உட்பட டிவி, குளிர்சாதனப் பெட்டி என பல்வேறு அன்பளிப்புகள் வழங்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக அமைச்சர் செந்தில் பாலாஜி பார்த்து, பார்த்துச் செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும் கணவன் மனைவிக்கு தாலி கட்டி விட்டதால் யாரும் யாருக்கும் அடிமை கிடையாது. இங்கு நடைபெற்றுள்ளது சுயமரியாதை திருமணம்.

பல்வேறு இடங்களில் இந்த சுயமரியாதை திருமணங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த சுயமரியாதை திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் எனப் போராடியவர் தந்தை பெரியார். அதனை வழிநடத்தியவர் பேரறிஞர் அண்ணா. அதன்வழி தற்பொழுது நம்முடைய தலைவர் பல்வேறு இடங்களில் சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைத்து வருகிறார்.

திருமணமானவர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் அடிமையாக இருக்கக் கூடாது. உங்களுடைய உரிமைகளை நீங்கள் கேட்டுப் பெற வேண்டும். எடுத்துக்காட்டாக அதிமுக, பாஜகவை போன்று இருந்து விடாதீர்கள், ஒருவர் காலில் ஒருவர் விழுந்து விடாதீர்கள்.

திருமணமானவர்கள் ஆசிபெற வேண்டுமென்றால் உங்களது பெற்றோர்கள் அல்லது மூத்தவர்கள் காலில் விழுந்து ஆசி பெறுங்கள். காலில் விழுந்தவர்கள் நிலைமை எல்லாம் தற்போது எப்படி இருக்கிறது என அனைவருக்கும் தெரியும்.

மனைவியின் காலில் கூட விழலாம் தப்பில்லை, தவறு செய்திருந்தால் மனைவி கணவன் காலில் விழலாம், கணவன் மனைவி காலிலும் விழலாம் அதில் தவறில்லை.

சண்டை வரத்தான் செய்யும், சண்டை இல்லாத குடும்பம் எங்கும் இல்லை. எந்த விதத்திலும், எந்த நேரத்திலும் உங்களுடைய உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டாம், அதனைக் கேட்டுப் பெறுங்கள் உங்களுக்குள் அந்த புரிதல் இருக்க வேண்டும்.

மேலும் இல்லற வாழ்வில் அடி எடுத்து வைத்துள்ள அனைவருக்கும் கலைஞரின் சார்பிலும் முதலமைச்சர் சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு சுத்தமான தமிழ் பெயரை வையுங்கள்.

இதனை உங்களிடம் வேண்டுகோளாக முன் வைக்கிறேன். இந்த ஒரே ஒரு உறுதியை மட்டும் தான் நான் உங்களிடம் கேட்கிறேன். தற்போது இந்தி மொழி திணிக்கப்பட்டு வரும் நிலையில் நம்முடைய தமிழ் மொழியைக் காப்பாற்ற வேண்டுமெனில் இது போன்ற சிறு சிறு விஷயங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.

மேலும் வீட்டில் அரசியல் பேசுங்கள். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது, இந்தியாவில் என்ன நடக்கிறது, ஒன்றிய அரசு என்ன செய்கிறது, தமிழக அரசு சார்பில் தீட்டப்பட்டுள்ள திட்டங்கள் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.

அதிமுக ஆட்சி நம்மிடம் அரசை விட்டு விட்டுச் சென்ற பொழுது கிட்டத்தட்ட ஐந்து லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்தது. கோவிட் பெருந்தொற்றில் அதிகமாகப் பாதிக்கப்பட்டது. இந்த கோவை மாவட்டம் அப்போது அதற்கான உடை அணிந்து மருத்துவமனைக்குள் நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்ட ஒரே முதலமைச்சர் நம்முடைய முதலமைச்சர் தான்.

இதனை யாரும் மறந்து விடக்கூடாது. நம்முடைய மக்களுக்கு மறதி என்பது அதிகம் பல விஷயங்களை மறந்து விடுகிறார்கள். தினமும் செய்தித்தாள்கள் படியுங்கள், தொலைக்காட்சி செய்திகளை பாருங்கள். அதிமுக-பாஜகவினர் தேர்தல் வரும்போது மட்டும் தான் வெளியில் வந்து மக்களை சந்திப்பார்கள் பின்பு சென்று விடுவார்கள்.

பிரச்சினை வரும்போது மட்டும் கட்சி எனக்குச் சொந்தம், கொடி எனக்குச் சொந்தம் எனக் கூறிக்கொண்டு வெளியில் வருவார்கள். 2021 சட்டமன்ற தேர்தலுக்குப் பின்பு தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போது தான் வெளியில் வந்தார்கள்.

மிகப்பெரிய தோல்வியைப் பார்த்தார்கள், மீண்டும் சென்று விட்டார்கள். மீண்டும் ஒரு எட்டு மாதத்திற்கு வெளியில் வர மாட்டார்கள். பாராளுமன்ற தேர்தல் வரும் போது தான் மீண்டும் வெளியில் வருவார்கள். ஆனால் திமுகவினர் எப்பொழுதும் மக்கள் பணியில் ஈடுபடுபவர்கள், தேர்தல் இருந்தாலும் இல்லை என்றாலும் மக்களோடு இருந்து மக்கள் பணி ஆற்றுபவர்கள் தான் திராவிட முன்னேற்ற கழகத்தினர். எனவே இந்த அரசுக்கு நீங்கள் எல்லாம் துணை நிற்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...