பி.எம்.கிசான் திட்ட உதவி பெற ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கி சேமிப்பு கணக்கு அவசியம்!

பி.எம்.கிசான் திட்டத்திற்கு 14 தவணைகளாக தொகையை மத்திய அரசு விடுவித்துள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6,000 ஊக்கத் தொகையை பெறுவதற்கு ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கி சேமிப்பு கணக்கு அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


கோவை: பி.எம்.கிசான் திட்டத்தில் ஊக்கத்தொகையை பெற ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கி சேமிப்பு கணக்கு அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 62,659 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். விவசாயிகளுக்கு 14 தவணைகளாக தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பி.எம்.கிசான் திட்ட வழிகாட்டுதலின் படி, ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் மட்டும் தான் பணம் செலுத்தப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்திட்டத்தில் இதுவரை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக இணைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதுவரை கோவை மாவட்டத்தில் 5,817 விவசாயிகள் ஆதார் எண் விவரத்தை வங்கி கணக்குடன் இணைக்காமல் உள்ளனர். விவசாயிகள் தங்களது சேமிப்பு கணக்கு வைத்துள்ள வங்கிக்கு நேரிடையாக ஆதார் அட்டை எடுத்துச்சென்று இணைத்து பயன்பெறலாம்.

அவ்விதம் செய்ய இயலாத விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் ஆதார் எண் இணைக்கப்பட்ட ஜீரோ பேலன்ஸ் சேமிப்பு கணக்குகளை தொடங்க இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கி முன் வந்துள்ளது. இந்த சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அந்த கணக்குடன் ஆதார் இணைக்கப்பட்டு விடும்.

மேலும், தங்களது ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து ஓ.டி.பி மூலம் சரிபார்ப்பு செய்யலாம் அல்லது அருகிலுள்ள இ-சேவை மையங்களின் மூலம் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து விரல் ரேகை பதிவு செய்து விவரங்களை சரிபார்ப்பு செய்யலாம்.

மேலும் பி.எம்.கிசான் செயலி மூலமாக முக அடையாளம் கொண்டும். இ.கே.ஒய்.சி செய்யலாம். அருகிலுள்ள இந்தியா போஸ்ட் பேமன்ட் பேங்கினை அணுகியும் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.

எனவே, இதில் ஏதேனும் ஒரு முறையில் பயனாளிகள் விரைவில் பி.எம் கிசான் திட்ட வலைதளத்தில் இ.கே.ஒய்.சி செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு வட்டார அளவிலான வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...