தந்தை பெரியார் விருதுக்கு பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது - கோவை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

ஆண்டுதோறும் சமூக நீதிக்காக பாடுபட்டவர்களுக்கு வழங்கப்படும் தந்தை பெரியார் விருதுக்கான பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தகுதி உடையவர்கள் தங்களது விவரங்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு.


கோவை: தந்தை பெரியார் விருதுக்கு பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு ஐந்து லட்சம் விருது தொகையும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.

இவ்விருதாளர் முதலமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார். 2023ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது.

எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விவரங்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் விண்ணப்பிக்கலாம்.

இதில் தங்களது விண்ணப்பம், தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூகநீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியரிடம் வந்து சேர வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...