ஆதிதிராவிட, பழங்குடியின மக்கள் நிலம் வாங்க மானியம் - ஆட்சியர் சமீரன் தகவல்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் சொந்தமாக விவசாய நிலம் வாங்கி விவசாயம் செய்து வருவாய் ஈட்ட விண்ணப்பங்கள் வரவேற்பு.



கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் தாட்கோ (தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம்) சார்பாக மானியத்தில் சொந்தமாக விவசாய நிலம் வாங்கி விவசாயம் செய்து வருவாய் ஈட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

2022-2023 ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின், சமூக பொருளாதார நிலை மேன்மையுடைய, சொந்தமாக விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பு விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டத்தை வெளியிட்டார்.

இதன்படி, இவ்வாண்டு 200 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த விவசாயத் தொழில் செய்பவர்களின் நில உடைமையை அதிகரிக்கும் பொருட்டும், பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையிலும், சொந்தமாக விவசாய நிலம் வாங்கி விவசாயம் செய்து வருவாய் ஈட்ட தாட்கோ மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்த 18 வயது முதல் 65 வயதிற்குப்பட்டவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் நிலம் வாங்க உத்தேசித்துள்ள நிலம் 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்குள் இருக்கலாம்.நிலத்தின் சந்தை மதிப்பில் 50சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் ஒரு பயனாளிக்கு இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.

நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் பழங்குடியினர் அல்லாத பிற இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். மேலும் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயனடைய www.tahdco.com என்ற இணையதளத்தில் ஆவணங்களுடன் விண்ணப்பித்துப்பயனடையலாம்.

மேலும் தாட்கோவில் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் நிலம் வாங்குதல், நிலம் மேம்படுத்துதல் மற்றும், துரித மின் இணைப்புத் திட்டம் ஆகிய விவசாயம் சார்ந்த திட்டங்களுக்கு மானியம் பெற்றுப் பயனடைந்த பயனாளிகளும், தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமையால் (TANHODA) செயல்படுத்தப்படும் நுண்ணீர்ப் பாசனம், ஒரு துளி அதிகப்பயிர், திட்டத்திலும் பயனடையலாம்.

இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு விவசாயிகள் மற்றும் விண்ணப்பதாரர்கள் தோட்டக்கலைத் துறையினை அணுகலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...