திருப்பூர்: பணியின் போது வீர மரணம் அடைந்த பல்வேறு துறைகளை சேர்ந்த காவலர்களுக்கு திருப்பூர் மற்றும் கோவை மாநகர காவல் துறையின் சார்பில் வீரவணக்க இன்று செலுத்தப்பட்டது.
திருப்பூர்: பணியின் போது வீர மரணம் அடைந்த பல்வேறு துறைகளை சேர்ந்த காவலர்களுக்கு திருப்பூர் மற்றும் கோவை மாநகர காவல் துறையின் சார்பில் வீரவணக்க இன்று செலுத்தப்பட்டது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையில் பல்வேறு பிரிவுகளில் பணியின் போது வீரமரணம் அடைந்த 414 காவலர்களுக்கு வீரவணக்க நாள் நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 21-ம் தேதியன்று அனுசரிக்கப்படுகின்றது.
இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் ஞாயிறன்று காலை வீரவணக்க நாள் நிகழ்வு காவல் ஆணையர் மனோகர் தலைமையில் நடைபெற்றது.

இதில் பணியின் போது மரணித்த 414 காவலர்களுக்கு அனைத்து பிரிவுகளை சேர்ந்த காவல்துறையினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் மரியாதை நிமித்தமாக 54 குண்டுகள் முழுங்க வீரவணக்கம் செலுத்தினர். இதில், மாநகர துணை காவல் ஆணையர் உமா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி உள்ளிட்ட மாநகர் மற்றும் மாவட்ட காவல் அதிகாரிகளும் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.
இதே போல், கோவை மாநகர காவல்துறையில் பணியின் போது மரணமடைந்த இரண்டு காவலர்கள் உள்ளிட்ட 414 வீரர்களுக்கான வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி பாப்பநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள மாவீரர் நினைவு மண்டபம் முன்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சி கோவை மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஓய்வு பெற்ற டி.ஜி.பி. ஐ.கே கோவிந்த், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் பெரியய்யா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் மற்றும் காவல் துறை அதிகாரிகள் 30 பேர் பங்கேற்றிருந்தனர்.
முன்னதாக காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவு தூண் மீது துப்பாக்கி மற்றும் தொப்பி ஆகியவை வைக்கப்பட்டு காவலர்களின் அணிவகுப்புடன் அவற்றிற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர், வானத்தை நோக்கி துப்பாக்கி ஏந்திய காவலர்கள் மூன்று முறை தலா 20 குண்டுகள் வீதம் 60 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.
இதை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
