கோவை: கோவை மாநகராட்சியில் ஸ்மார்டி சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது
கோவை: கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஸ் தலைமையில் நடைபெற்றது.
கோவை மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு அரசு கூடுதல் செயலாளர் நிதித்துறை மரு.இரா. ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் க. விஜயகார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். அப்போது, மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் தற்போதைய நிலை குறித்தும், துவங்கப்படவிருக்கும் திட்டப்பணிகள் குறித்தும் மாநகராட்சி அலுவலர்களிடம், நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஸ் கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- டி.பி., சாலை மற்றும் திருவேங்கடம் சாலையை தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் பகுதியிலும் ரூ. 60 கோடி மதிப்பீட்டில் மாதிரி சாலை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதிகளில் 24 மணிநேர குடிநீர் விநியோகம் மற்றும் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளன. குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் ரூ. 577 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகள் அடுத்தமாதம் துவங்கப்படும்.
நஞ்சுண்டாபுரம் மற்றும் ஒண்டிப்புதூர் பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இவை போன்று மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது, என்றார்.
மேலும், சொத்துவரி உயர்வு குறித்து கேள்விகேட்டபோது, "சொத்துவரி உயர்வால் ஆண்டிற்கு ரூ. 850 கோடி வரை அரசின் வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், மேலும் பல வளர்ச்சி திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும், எனக் கூறினார். இக்கூட்டத்தில் துணை ஆணையாளர் ப.காந்திமதி, மாநகரப் பொறியாளர் ஆ.லட்சுமணன், செயற்பொறியாளர் (திட்டம்) ரவிச்சந்திரன் மற்றும் தணிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.