திருப்பூர்: இந்தோனேசியா நாட்டில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு தடகளப் போட்டியில் 2 வெள்ளிப்பதக்கம் பெற்ற திருப்பூரை சேர்ந்த வீரருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருப்பூர்: இந்தோனேசியா நாட்டில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு தடகளப் போட்டியில் 2 வெள்ளிப்பதக்கம் பெற்ற திருப்பூரை சேர்ந்த வீரருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி ராவுத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தருண் அய்யாசாமி. இவர் இந்தியா சார்பில் இந்தோனேசியா நாட்டில் நடைபெற்ற ஆசிய போட்டிகளில் கலந்துகொண்டு 2 வெள்ளிப்பதக்கங்களை பெற்றார். இவரின் சாதனையை அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வந்த நிலையில் தமிழக அரசும் பரிசுத்தொகை அறிவித்து ஊக்கப்படுத்தியது.

இந்நிலையில் இன்று சொந்த ஊரான அவிநாசி திரும்பிய தருண் அய்யாசாமிக்கு அவிநாசி பொதுமக்கள், அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு அமைப்புகள் புதிய பேருந்து நிலையத்தில் மேளதாளங்களுடன் பட்டாசு வெடித்து வரவேற்றனர். அப்பகுதி பொதுமக்கள் சால்வை மாலை அணிவித்ததோடு அப்பகுதியைச் சேர்ந்த நகைக்கடை அதிபர் ஒருவர் தங்க மோதிரத்தையும் தருணுக்கு பரிசளித்தார்.

மேலும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலுக்கு ஊர்வலமாக சென்ற தருண் அய்யாசாமிக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செலுத்தப்பட்டு வீடு வரை ஊர்வலமாக சென்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய தருண் அய்யாசாமி, இந்தியாவிற்கு பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிப்பதாகவும், அரசுகள் தனக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி உத்வேகம் அளித்ததாகவும், இனி வருகின்ற விளையாட்டுகளில் முழுதாய் பங்கேற்று பதக்கங்கள் வெல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.