கோவை: மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளால் வீசியெறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் பாட்டில் கழிவுகளை அப்புறப்படுத்தி சூழலை பாதுகாக்க களம் இறங்கியுள்ளனர் இயற்கையை நேசிக்கும் மாணவர்கள்.
கோவை: மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளால் வீசியெறியப்படும் பிளாஸ்டிக் மற்றும் பாட்டில் கழிவுகளை அப்புறப்படுத்தி சூழலை பாதுகாக்க களம் இறங்கியுள்ளனர் இயற்கையை நேசிக்கும் மாணவர்கள்.
நீலகிரி செல்லும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் மேட்டுப்பாளையத்தை கடந்தே சென்றாக வேண்டும். அவ்வாறு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர் தங்களோடு கொண்டு வரும் பிளாஸ்டிக் கவர்கள், தண்ணீர் பாட்டில்கள், மது பாட்டில்கள் போன்றவற்றை பயணத்தின் போது வீசிவிட்டு செல்கின்றனர்.
இதனால் வனச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதோடு, வனவிலங்குகள் இவற்றை உண்பதால் உயிரிழந்து வருகின்றன. வீசப்படும் மது பாட்டில்கள் வனத்திற்குள் உடைந்து சிதறிக்கிடப்பதால் இதனை மிதிக்கும் யானைகளின் கால்களில் கண்ணாடி சிதறல் குத்தி அவற்றின் இறப்பிற்கும் காரணமாகின்றன.

இதனையடுத்து, இன்று நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் மேட்டுப்பாளையம் வனத்துறையினரோடு இணைந்து 'இயற்கையை நேசிப்போம்' என்ற பெயரில் வனத்தின் வழியே செல்லும் சாலையோரத்தில் மற்றும் அதனை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் கிடந்த பிளாஸ்டிக் மற்றும் மது பாட்டில்களை அப்புறப்படுத்தினர்.
வனத்தையும் அதில் வாழும் உயிரினங்களையும் காப்பது அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையிலும் காட்டை சுத்தப்படுத்தும் நோக்கிலும் இப்பணியினை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த தன்னார்வலர்கள், இதனை இப்பகுதியை கடக்கும் அனைத்து சுற்றுலா பயணிகளும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றனர்.