கோவை : அனுமதியை புதுப்பித்துக் கொள்ளாத லாரிகளுக்கு மண் அள்ளுவதற்கு கோவை செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.
கோவை : அனுமதியை புதுப்பித்துக் கொள்ளாத லாரிகளுக்கு மண் அள்ளுவதற்கு கோவை செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.
கோவை மாவட்டம் தடாகம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களான வீரபாண்டிபுதூர், ஆனைக்கட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை, சோமையனூர் மற்றும் கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 150-க்கும் மேற்பட்ட செங்கல்சூளைகள் செயல்பட்டு வருகின்றன. கொங்கு மண்டலத்திலேயே செங்கல் தயாரிப்பில் இந்தப் பகுதிகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இங்கு, சுமார் 10,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த சூளைகளுக்கு தேவையான மண், உரிய அனுமதியுடன் அருகே உள்ள மலைப் பகுதிகளில் இருந்து சுரண்டி எடுக்கப்பட்டு, செங்கல் தயாரிக்கப்பட்டு வருகிறது. மண் எடுக்கும் பணிக்காக 300-க்கும் மேற்பட்ட லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன.
சட்டவிரோத மண் கடத்தலை தடுக்கும் வகையில், சூளைகளுக்கான மண்ணை எடுக்கும் பணியில் ஈடுபடும் லாரிகளுக்கு வருடாந்திர வரியை தமிழக கனிமவளத்துறை வசூலித்து வருகிறது. ஆனால், பெரும்பாலான சூளைகளின் உரிமையாளர்கள், வருடாந்திர வரியைப் புதுப்பிக்காமல் சட்டவிரோதமாக மண்ணை எடுத்து வருவது தெரிய வந்துள்ளது. 30 சதவீத லாரிகளே இந்த வரியை புதுப்பித்துள்ளன. இதையடுத்து, அனுமதியை புதுப்பித்துக் கொள்ளாத லாரிகளுக்கு மண் அள்ளுவதற்கு கோவை செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக கோவை செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தர்மராஜ் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் கூறியதாவது :- மண் அள்ளுவதற்கான உரிமையைப் புதுப்பித்துக் கொள்ள கால அவகாசம் வழங்குவது குறித்து ஆலோசிக்க திங்கட்கிழமை செங்கல் உற்பத்தியாளர்கள் சங்கக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மண் அள்ளுவதை அனுமதிக்க முடியாது. விரைவில் இதற்கு தீர்வு காணப்பட வேண்டும், என்றார்.
இதேபோல, தடாகம் மலைப் பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக மண் அள்ளப்பட்டுள்ளதால், தற்போது சுற்றுச்சூழல் பாதிப்புக்கான அபாயம் ஏற்பட்டுள்ளது.
" செங்கல் உற்பத்தியாளர்களுக்கு 3 அடிக்கு மட்டுமே மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தடாகம் பகுதியில் குறிப்பிட்ட இடங்களில் 30 அடிக்கும் மேலாக மண் சுரண்டி எடுக்கப்பட்டுள்ளது. எனவே, குறைந்த அளவிலான லாரிகளுக்கு மண் அள்ள அனுமதி வழங்கப்பட வேண்டும்," என்கின்றார் சமூக ஆர்வலர் ஒருவர்.