கோவை: ராமநாதபுரத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் கட்டிடத்தில் மின் கசிவினால் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை: ராமநாதபுரத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் கட்டிடத்தில் மின் கசிவினால் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தற்போது தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 350-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இன்று பள்ளி முடிந்த பின்பு சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், திடீரென பள்ளியின் ஒரு பகுதியில் புகை மூட்டமாக இருந்துள்ளது.
இதைக் கண்ட ஆசிரியர்கள் தீயணைப்பு துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர், மூன்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி தீயை அணைத்து வருகின்றனர்.

பள்ளியில் அதிக அளவில் மாணவர்கள் இல்லாத காரணத்தால், எந்த பாதிப்பும் இல்லை. அதேபோல இந்த பழைய கட்டிடம் எந்தவிதமான பராமரிப்பும் இன்றி சிமெண்ட் ஓடுகளால் அமைக்கப்பட்டுள்ளதால், தீயானது கொஞ்சம் கொஞ்சமாக பரவியது.
இந்த திடீர் தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் நேரில் வந்து பார்வையிட்டுள்ளார். சம்பவம் குறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, தீ விபத்து ஏற்பட்ட பள்ளியை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கோவை மாநகராட்சி 68-வது வார்டில் உள்ள ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், தீயணைப்பு துறையினர் உடனே வந்து தீயை அணைத்து வருகின்றனர். ஆனால், இந்த தீ விபத்திற்கு மின்கசிவு காரணம் கிடையாது.

ஏற்கனவே, இந்தக் கட்டிடத்தை மறுசீரமைக்க திட்டமிட்டுள்ளோம். இந்த நிலையில், திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை. தீ விபத்திற்கான காரணத்தை தீயணைப்புத் துறையினரும், காவல்துறையினரும் விசாரணை செய்து வருகின்றனர். கட்டிடத்தில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் ஆய்வு செய்துவிட்டு புதிய கட்டிடத்தை அமைத்து தர தயாராக உள்ளோம், என்றார்.
