திருப்பூர்: திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரி பார்த்தல் பணி இன்று தொடங்கியது.
திருப்பூர்: திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரி பார்த்தல் பணி இன்று தொடங்கியது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரி பார்த்தல் பணி தொடங்கப்பட்டது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, காங்கயம், பல்லடம், அவினாசி, தாராபுரம், உடுமலைப்பேட்டை மற்றும் மடத்துக்குளம் ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெங்களுரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திலிருந்து பெறப்பட்டு கீழ்க்கண்ட எண்ணிக்கையில் பல்லடம் மற்றும் திருப்பூர் தெற்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

1. வாக்குப்பதிவு இயந்திரம் - 5880
2. கட்டுப்பாட்டு இயந்திரம் - 3200
3. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் - 3200
பல்லடம் வட்டாட்சியர் அலுவலக கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம்) பாரத் எலக்ட்ரானிக் நிறுவன பொறியாளர்களால் முதல் நிலை சரிபார்ப்பு பணி கடந்த மாதம் 27-ம் தேதி தொடங்கி கடந்த 05-ம் தேதி வரை நடைபெற்று முடிவடைந்தது.

மேலும் திருப்பூர்(தெற்கு) வட்டாட்சியர் அலுவலக கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாரத் எலக்ட்ரானிக் நிறுவன பொறியாளர்களால் முதல் நிலை சரிபார்ப்பு பணி இன்று தொடங்கப்பட்டது. மேற்படி முதல் நிலை சரிபார்ப்பு பணியினை திருப்பூர் சார் ஆட்சியர் ஜெ.ஷ்ரவன்குமார் தொடங்கி வைத்தார்.
அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். உதவி ஆணையர் (கலால்) வி.சக்திவேலு, தேர்தல் வட்டாட்சியர் ச.முருகதாஸ், திருப்பூர்(தெற்கு) வட்டாட்சியர் அ.ரவிச்சந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதே போல், நீலகிரி மாவட்டத்திற்கு மூன்று தொகுதிகளுக்கான 1,720 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 930 வாக்கு சரிபார்ப்பு இயந்திரங்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதை சரிபார்த்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திர பாதுகாப்பு அறையில் வைக்கும் பணி தொடங்கியது.

மேலும், வரும் திங்கட்கிழமை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்களை சரி பார்க்க பெல் நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் வர இருப்பதாக மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.