கோவை: எலி காய்ச்சல் என்பது குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான் என்றும், யாரும் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை என மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் பானுமதி தெரிவித்தார்.
கோவை: எலி காய்ச்சல் என்பது குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான் என்றும், யாரும் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை என மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் பானுமதி தெரிவித்தார்.
எலிக்காய்ச்சல் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை குறித்து கோவை பந்தய சாலையில் உள்ள அலுவலகத்தில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் பானுமதி செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது :- லெப்டோஸ்பைரோசிஸ் என்ற எலிக்காய்ச்சல் நோயானது ஸ்பைரோகீட் என்னும் பாக்டீரியா வகையைச் சேர்ந்த கிருமிகளால் மனிதன் மற்றும் விலங்குகளை தொற்றுகிறது.
இது நோய் தொற்றுள்ள விலங்குகளின் சிறுநீர் மூலம் நீர், நிலம் மற்றும் உணவுப் பொருட்களில் பரவும்போது இந்த நோய் மனிதர்களை தாக்குகிறது. எலி காய்ச்சல் நோய் பரவாமல் இருக்க அனைவரும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
இந்த வகை காய்ச்சல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தொற்று நோய் இல்லை. தண்ணீர் மற்றும் உணவுகள் மூலமாகத்தான் அதிகம் உண்டாகிறது. இந்த நோய்க் கிருமிகள் உடலில் தாக்கும்போது பல்வேறு அறிகுறிகள் உண்டாகிறது. குறிப்பாக, சிவந்த கண்கள், தொடர் காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்ற பல அறிகுறிகள் உண்டாகிறது.
பொதுமக்களில் யாருக்காவது காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவர்களை அணுகி பரிசோதிக்க வேண்டும். பொதுமக்கள் காய்ச்சல் வரும் போது மருத்துகடைகளில் மருந்து மாத்திரைகள் வாங்கி உண்ணுவதை நிறுத்த வேண்டும்.
இந்த எலிக் காய்ச்சல் நோய்க்கு தேவையான அனைத்து மருந்துகளும், நமது கோவை அரசு மருத்துவமனையில் உள்ளது. எலி காய்ச்சல் என்பது குணப்படுத்தக்கூடிய ஒன்றுதான். யாரும் பீதி அடைய வேண்டிய அவசியமில்லை.
எலி காய்ச்சல் அறிகுறியுடன் யாராவது இருந்தால் உடனே தெரிவிக்க சொல்லி மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல, கேரள, தமிழக எல்லைப்பகுதிகளில் உள்ள 18 கிராமங்களிலும் தொடர் கண்காணிப்பில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.