கோவை: கோவை நகரின் முக்கிய சாலைகளை நவீன வசதிகள் கொண்ட மாதிரி சாலையாக மாற்றும் திட்டத்திற்கு நிதி அடிப்படையில் திருத்தங்கள் செய்ய அரசு பரிந்துரை செய்துள்ளதால், பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்படும் என தெரியவந்துள்ளது.
கோவை: கோவை நகரின் முக்கிய சாலைகளை நவீன வசதிகள் கொண்ட மாதிரி சாலையாக மாற்றும் திட்டத்திற்கு நிதி அடிப்படையில் திருத்தங்கள் செய்ய அரசு பரிந்துரை செய்துள்ளதால், பணிகள் துவங்குவதில் தாமதம் ஏற்படும் என தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரின் முக்கிய சாலைகளை 'மாதிரி சாலை'யாக உருவாக்க கோவை மாநகராட்சி முடிவு செய்து, திட்ட அறிக்கை தயாரிப்பதற்கான பனிகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தது.
மோட்டார் அல்லாத வாகனங்களுக்கான பிரத்தியேக தளம், நடைபயிற்சி செய்பவர்களுக்கான பாதை, சூரிய மின் விளக்குகள், இருக்கை வசதிகள், நவீன கழிப்பறைகள், தொலைத்தொடர்பு கம்பிகளை நிலத்திற்கு அடியில் நவீன தொழில்நுட்ப இணைப்புகளின் மூலம் கட்டமைத்தல் போன்ற அம்சங்கள் மாதிரி சாலை திட்டத்தில் வடிவமைக்கப்பட்டன.

முதற்கட்டமாக ரூ.25 கோடி மதிப்பீட்டில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள டி.பி.சாலையில் 1.80 கி.மீ நீளத்திற்கு மாதிரி சாலை உருவாக்கும் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது.
பின்னர், திருவேங்கட சாலையில் 1.20 கி.மீ நீளத்திற்கும், ரேஸ்கோர்ஸ் பகுதியில் 3 கி.மீ நீளத்திற்கும் மாதிரி சாலைகள் அமைப்பதற்கான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்பட்டன.

இவை நிதி ஒப்புதலுக்காக, நகராட்சி நிர்வாகத்துறை மூலம் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டன. அப்போது திட்டத்தின் நிதி மதிப்பீடு அதிகமாக இருப்பதால், நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் திட்ட வரைபடத்தில் திருத்தங்கள் செய்யுமாறு அரசு வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறுகையில், "நிதி மதிப்பீட்டை கருத்தில் கொண்டு வரைபடத்தில் மாற்றங்கள் செய்யுமாறு, திட்ட அறிக்கை தயாரித்த தனியார் நிறுவனத்திடம் தற்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாதிரி சாலை திட்டத்திலிருந்த சில சிறப்பு அம்சங்கள் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. மேலும், வரைபடம் திருத்தி உருவாக்கப்பட்டு ஒப்புதல் பெறவிருப்பதால், மாதிரி சாலைப் பணிகள் துவங்குவதில் காலதாமதம் ஏற்படும்." என்றார்.

இதனால், மாதிரி சாலைகள் உருவாக்க திட்டமிடப்பட்டிருந்த என்.எஸ்.ஆர் சாலை மற்றும் சங்கனூர் சாலைகளில் இத்திட்டம் நிறைவேறும் சாத்திய கூறுகள் மிகவும் அரிதாகியுள்ளன. அப்படியே உருவானாலும் அவை தற்போது நகரில் காணப்படும் சாதாரண சாலையைப் போல் குண்டும் குழியுமாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.