கோவை: பழம்பெரும் நகைச்சுவை நடிகர் பி.பி.சுப்பையா என்னும் வெள்ளை சுப்பையா(80) உடல் நலக்குறைவால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று காலமானார்.
கோவை: கோவை: பழம்பெரும் நகைச்சுவை நடிகர் பி.பி.சுப்பையா என்னும் வெள்ளை சுப்பையா(80) உடல் நலக்குறைவால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று காலமானார்.
எண்பது வயதான வெள்ளை சுப்பையா தனது இளம் வயதில் நாடகங்களில் நடிக்கத் துவங்கி பின்னர், தமிழ் திரைத்துறைக்கு வந்துள்ளார். தென்னிந்திய திரைப்பட சங்கத்தின் மூத்த உறுப்பினரான இவர் வைதேகி காத்திருந்தால், கரகாட்டக்காரன் உள்ளிட்ட ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார்.

இவரது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி. சிறுநீரக பிரச்சினை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர் கடந்த நான்காண்டுகளாக தனது நடிப்பு தொழிலை கைவிட்டு மேட்டுப்பாளையத்தில் சிவன்புரம் காலனி பகுதியில் உள்ள இவரது ஒரே மகளான தனலட்சுமி வீட்டில், தனது மனைவி சாவித்திரியோடு தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு (புதன்கிழமை) அவர் காலமானார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரஜினி, கமல் முதல் இன்றைய இளம் நடிகர்கள் வரை இணைந்து நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். இவரது கலைச் சேவையை பாராட்டும் வகையில் தமிழக அரசின் விருது, கலை பண்பாட்டுத்துறை விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றுள்ளார். இன்று பிற்பகல் இவரது உடல் மேட்டுப்பாளையத்தில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.