நீலகிரி : உதகை மாவட்ட நீதி மன்றம் சார்பில் கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை மாவட்ட நீதிபதி வடமலை இன்று அனுப்பி வைத்தார்.
நீலகிரி : உதகை மாவட்ட நீதி மன்றம் சார்பில் கேரளாவில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை மாவட்ட நீதிபதி வடமலை இன்று அனுப்பி வைத்தார்.
கேரளாவில் பெய்த கனமழை பாதிப்பால் ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். பல பேர் உணவின்றியும், உடைகள் இன்றியும் தவித்து வந்த நிலையில் இன்று நீலகிரி மாவட்ட நீதி மன்றம் சார்பில் 3 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள் அங்குள்ள இலவச சட்ட உதவி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கேரளாவில் பெய்த கனமழையால் இடுக்கி, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, கோட்டயம், பாலக்காடு மற்றும் ஆலப்புழா உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறின. இங்குள்ள ஆறுகள், நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால், ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.
எனவே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க பல்வேறு அமைப்பினர் நீலகிரியில் இருந்து நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில், உதகை மாவட்ட நீதிமன்றம் சார்பில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பொருட்களை கேரளாவிற்கு வழங்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பிஸ்கட், பால், மலைக்காய்கறிகள், போர்வை, பாய், நாப்கின்கள், பிளாஸ்டிக் வாளிகள், மருந்து, மாத்திரைகள், மளிகை பொருட்கள், ஆடைகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தை மாவட்ட நீதிபதி வடமலை வழியனுப்பி வைத்தார்.