கோவை: தடாகம் அருகே நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை: தடாகம் அருகே நள்ளிரவு நேரத்தில் வீட்டிற்குள் புகுந்த யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது.
களையனூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல், ஜெயக்கொடி தம்பதியினர். இவர்களுக்கு கிஷோர் என்ற 19 வயது மகன் உள்ளார். இன்று நள்ளிரவு 2.30 மணியளவில் வீட்டின் வெளியே சத்தம் கேட்கவே, சக்திவேல் அங்கு சென்று பார்த்தார். அப்போது ஒரு தாய் யானையும், ஒரு குட்டி யானையும் வீட்டின் கதவினை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது.

இதனால் பதற்றமடைந்த சக்திவேல் மற்றும் ஜெயக்கொடி ஆகிய இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். வீட்டினுள் சிக்கிக்கொண்ட கிஷோர் அங்கிருந்த சிமென்ட் சிலாப்பில் ஏறிக் கொண்டார்.
தொடர்ந்து, கதவை உடைத்து உள்ளே சென்ற குட்டி யானை வீட்டினுள் இருந்த அரிசியை தூக்கி சென்றது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறையினர், அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
யானைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வந்து, மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் கொடுப்பதாகவும், இதனை உடனடியாக களைய வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.