கோவை: ஆவாரம்பாளையம் பகுதியில் கடன் சுமையால், தாய் மற்றும் தந்தையை வெட்டிக் கொலை செய்துவிட்டு, மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோவை: ஆவாரம்பாளையம் பகுதியில் கடன் சுமையால், தாய் மற்றும் தந்தையை வெட்டிக் கொலை செய்துவிட்டு, மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஆவாரம் பூ அடுக்குமாடி குடியிருப்பில் தாய் லட்சுமி (47) மற்றும் தந்தை பாலமுருகன் (50) ஆகியோருடன் இவர்களது மகன் வைரமுத்துவும் (28) வசித்து வந்துள்ளார். வைரமுத்து சொந்தமாக டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்துள்ளார். தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், கடன்சுமையால் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், கடன்சுமையை தாங்க முடியாத வைரமுத்து, தனது தந்தை மற்றும் தாய் இருவரையும் கத்தியால் கை மற்றும் கழுத்து பகுதியில் அறுத்து கொலை செய்துவிட்டு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனிடையே, வைரமுத்து திருப்பூரிலுள்ள அவருடைய சித்தி மகாலட்சுமிக்கு கடிதம் ஒன்று எழுதியிருப்பது தெரிய வந்துள்ளது. அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது :- கடன்சுமையால் இந்த உலகை விட்டு செல்கிறேன். நான் இல்லாத இந்த உலகில் எனது தாய். தந்தையும் இருக்க விரும்பவில்லை என அந்தக் கடிதத்தில் கூறியதுடன், சொத்து விவரம் மற்றும் வீட்டின் சாவியை கூரியர் மூலம் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில், இன்று மாலை கடிதத்தை படித்த சித்தி மகாலட்சுமி அதிர்ச்சியடைந்தார். பின்னர், அவர் கொடுத்த தகவலின் பேரிலேயே சம்பவ இடத்திற்கு சென்ற பீளமேடு போலீசார் வீட்டை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, பாலமுருகன் மற்றும் லட்சுமி தம்பதிகளின் கை, கழுத்து பகுதியில் அறுக்கப்பட்டும், வைரமுத்து தூக்கிட்டு் தற்கொலை செய்து கொண்ட நிலையில் 3 பேரும் சடலமாக கிடந்துள்ளனர். அவர்களது உடல்களை மீட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பீளமேடு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து, வைரமுத்து எழுதிய கடிதத்தை மகாலட்சுமியிடமிருந்து வாங்கி பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல, வைரமுத்து தன் மரணம் குறித்து ஒரு வீடியோ ஒன்றை எடுத்துள்ளார். அந்த வீடியோவை வைத்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மரணமடைந்த சம்பவம் கோவையில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது