கோவை : ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தின் மாதிரி வடிவங்கள், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.
கோவை: ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வரும் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தின் மாதிரி வடிவங்கள், மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள எட்டு குளங்களையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைத்து மேம்படுத்துவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக, சுமார் ரூ. 88 கோடி மதிப்பீட்டில் பெரியகுளம், வாலாங்குளம் மற்றும் வாலாங்குளம் பாலத்தின் அடிப்பகுதி ஆகியவை புனரமைக்க ஒயாசிஸ் நிறுவனத்தின் மூலம் திட்டம் தயாரிக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.

குளக்கரைகளில் உருவாக்கப்படவுள்ள பூங்கா, இருக்கைகள், நடைபாதை, மோட்டார் இல்லாத வாகனங்களுக்கான சாலை, படகுக் கூடாரம், பேருந்து நிறுத்தம் ஆகியவற்றின் சிறிய அளவிலான மாதிரி வடிவங்கள் உருவாக்கப்பட்டு மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், வாலங்குளம் பாலத்தின் அடிப்பகுதியில் உருவக்கப்பட உள்ள கட்டுமானங்கள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றோடு, கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள எட்டு குளங்களின் மாதிரி வடிவமும் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை ஸ்மார்ட் சிட்டியின், திட்ட மேலாளர் சுபாஷ் கூறுகையில், "குளக்கரைகளில் உருவாக்கப்படவுள்ள நவீன கட்டமைப்புகள் தெளிவான பார்வைக்காக, திட்டத்தின் மாதிரி வடிவங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மிகவும் துல்லியமான அளவுகளோடு நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மாதிரி வடிவங்கள் திட்டம் குறித்த துல்லியமான காட்சியை நம் கண்முன் கொண்டு வருகிறது. இவை மக்களின் பார்வைக்காக மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள ஸ்மார்ட்சிட்டி தளத்தில் வைக்கப்பட்டுள்ளது," என்றார்.
