கோவை: கோவை மாநகராட்சியில் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவை: கோவை மாநகராட்சியில் பல்வேறு ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இவை குறித்த விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட 'கோவை ஸ்மார்ட் சிட்டி' வலைதளம் பல வருடங்களாக முடங்கிக் கிடக்கிறது.

கேள்விக்குறி
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் டி.பி சாலை மற்றும் ரேஸ்கோர்ஸ் சாலையை மாதிரி சாலையாக உருவாக்குதற்கான திட்டப்பணிகள், உக்கடம் பெரியகுளம் மற்றும் வாலாங்குளம் ஆகியவற்றை புனரமைக்கும் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், இவை பற்றிய முழுமையான தகவல்களையும், திட்ட வரைபடங்களையும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால், கோவைக்கான ஸ்மார்ட் சிட்டி வலைதளம் வருட கணக்கில் முடங்கிக் கிடப்பதால், இதுகுறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ள முடியாத நிலை உள்ளது. அதே நேரத்தில், மாநகராட்சி மேற்கொண்டு வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளின் வெளிப்படைத்தன்மை கேள்விக்குறியாக உள்ளதாகவும் கருதப்படுகிறது.
"கோவை மாநகராட்சி வலைதளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கென சில வலைதள லிங்குகள் (link) உள்ளன. அவற்றை க்ளிக் செய்தால் வலைதளத்திற்குள் செல்வதில்லை. பெரும்பாலான மக்கள் தங்களின் இணையதள இணைப்பில் கோளாறு இருப்பதாகக் கருதி வலைதளத்தை விட்டு வெளியே சென்றுவிடுவார்கள்.
ஆனால், இவை அனைத்தும் மக்களிடம் தகவல்களை மறைப்பதற்காக செய்யப்படும் யுக்திகள். நம் நகரித்தின் தேவைக்கேற்ப ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை வகுக்க வேண்டும். போக்குவரத்து இல்லாத மேம்பாலங்களும், வைஃபை சேவைகளும் பயனற்ற திட்டங்கள்.
மக்களின் கருத்தும் கேட்கப்படுவதில்லை, மக்களிடம் திட்டம் பற்றிய தகவல்களையும் பகிர்ந்து கொள்வதும் இல்லை. 24 மணி நேர குடிநீர் ஒப்பந்தம் கடுமையான கண்டனங்களுக்கு பிறகு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் மாநகராட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லையென்பது பொதுப்பார்வைக்கு மிகத்தெளிவாக தெரியவந்துள்ளது." என்கிறார் மக்கள் சிவில் உரிமை கழகத்தின், மாநில இணை செயலாளர் பொன் சந்திரன்.
சூயஸ் ஒப்பந்தம்
24 மணி நேர குடிநீர் விநியோகத்திற்காக சூயஸ் என்ற தனியார் நிறுவனத்தோடு 26 வருடங்களுக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடக் கோரி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், இயக்கங்களும் தொடர்ந்து போராடினர். இந்த சூழலில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகராட்சி வலைதளத்தில் சூயஸ் திட்டத்துடனான ஒப்பந்தம் வெளியிடப்பட்டது.

இதுபோன்று திட்டம் பற்றிய தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்பதற்காக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கொடுக்கப்படுக்கும் மனுக்களுக்கும் பதில் அளிக்கப்படுவதில்லை என்கிறார்கள் கோவையைச் சேர்ந்த ஆர்.டி.ஐ (RTI) ஆர்வலர்கள்.
முறைகேடுகளா?
"கடந்த 3 வருடங்களாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், திட்டத்தின் வரைபடம், நிதி ஒதுக்கீடு, பணிகளின் தற்போதைய நிலை ஆகிய அடிப்படை தகவல்களை மக்கள் தெரிந்துகொள்ள அதிகாரிகள் அனுமதிப்பதில்லை.
வலைதளம் செயல்படவில்லை, ஒப்பந்ததாரரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக காரணம் கூறி ஆர்.டி.ஐ மனுக்களுக்கும் தகவல் தர மறுக்கின்றனர். இந்திய சாட்சிய சட்டம் மூலம் தகவல்களை கேட்டாலும் பதில் அளிப்பதில்லை. திட்டங்கள் அனைத்தும் மூடி மறைத்து செயல்படுத்தப்படுகிறது. மக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும், மக்களுக்கான திட்டங்களை மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்றால், மிகப்பெரிய அளவில் முறைகேடுகள் நடப்பதாகத் தான் கருத முடியும்." என்கிறார் ஆர்.டி.ஐ ஆர்வலர் எஸ்.பி.தியாகராஜன்.
இயங்காத வலைதளம் பற்றி கோவை மாநகராட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரியிடம் கேட்டபோது, "ஸ்மார் சிட்டி திட்டப்பணிகள் குறித்த தகவல் அனைத்தும் சேகரிக்கப்பட்டு வருகிறது. சிறப்பான வடிவமைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டிக்கான பிரத்தியேக வலைதளம் விரைவில் செயல்பாட்டுக்கு வருவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது." என்றார்.
தகவலும், தகவல் தொழிநுட்பமும் சார்ந்த உலகில் நாம் வாழுகின்றபோதும், ஒரு வலைதளத்தை முறையாக இயக்கி பராமரிப்பதில் கோவை மாநகராட்சிக்கு திறனும் தொழில்நுட்ப அறிவும் குறைவா? அல்லது மக்களின் கண்கள் கட்டியே இருக்க வேண்டும் என்ற முனைப்பா? என்ற பல்வேறு கேள்விகள் மக்கள் மனதில் எழுகிறது.