கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் ஆட்டோவை கயிற்றில் கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர் ஆட்டோவை கயிற்றில் கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வரும் நிலையில், இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுவதும் எழுந்துள்ளது. இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும் விலை நிர்ணயத்தை மத்திய அரசே செய்ய வலியுறுத்தியும், கோவையில் வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா அமைப்பினர், ஆட்டோவை கயிற்றில் கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஆட்டோவை இழுத்து வந்த அக்கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, பா.ஜ.க., ஆட்சிக்கு வந்தால் ரூ. 50-க்கு பெட்ரோல் விலை கொண்டு வரப்படும் என வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி பதவி விலக வேண்டும். பெட்ரோல்,டீசல் விலை நிர்ணயத்தை மத்திய அரசே மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, நிர்வாகிகள் மட்டும் ஆட்சியர் அலுவலகத்திற்குள் சென்று மனு அளிக்குமாறு அறிவுறுத்திய போலீசார், ஆட்டோவை இழுத்து செல்ல அனுமதி மறுத்தனர். இதனையடுத்து, வெல்பேர் பார்ட்டி அமைப்பினர் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.