கோவை: அறப்போர் இயக்கம் சார்பாக ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு மக்கள் கூட்டம் இன்று கோவை ரயில்நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
கோவை: அறப்போர் இயக்கம் சார்பாக ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு மக்கள் கூட்டம் இன்று கோவை ரயில்நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மக்களுக்கு அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை, ஊழல் தடுப்பு, ஒழிப்பு துறைகளுக்கு சுதந்திரம், அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகளின் பொறுப்புடைமை உள்ளிட்டவற்றை குறித்து விவாதிக்கப்பட்டன. இதில் பல சமூக ஆர்வலர்களும், மக்களும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் அறப்போர் மாநில உறுப்பினர் அத்தர் அகமது பேசுகையில், "நாம் சிறுவயதில் ஊழல் என்ற வார்த்தை கேள்விப்படும் போது ஒரு சதவீதம், இரண்டு சதவீதம் என கேள்வி பட்டோம். அதன்பின் தற்போது, 30 சதவீதம், 40 சதவீதம் என கேள்விப்படுகிறோம். சமீபத்தில், மின்சார துறையில் நிலக்கரி வாங்கியதில் ரூ. 6 ஆயிரம் கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளது. இதனை அறப்போர் இயக்கம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளோம். இதுபோன்ற பல ஊழல் விஷயங்களை கொண்டு வந்துள்ளோம். மக்களும் ஊழலை ஒழிக்கப் போராட வேண்டும்," என்றார்.
அறப்போர் இயக்கம் சார்பாக வரும் 23-ம் தேதி 'என்னங்க சார் உங்க சட்டம்' தலைப்பில் சென்னையில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு மக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், ஊழல் எதிர்ப்பு அறிக்கை உருவாக்கவுள்ளனர்.

இது தொடர்பாக பேசிய அறப்போர் இயக்க மாநில உறுப்பினர் ஜெயராமன் பேசுகையில், "23-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் ஊழல் எந்த மட்டம் முதல் எந்த மட்டம் வரை, எந்த வகையில் ஊழல் நடைபெறுகிறது, அது எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பது குறித்து விவாதிக்கவுள்ளோம். அதனை வைத்து ஊழல் எதிர்ப்பு அறிக்கை உருவாக்கப்படும்," என்றார்.
அதன்பின் அவர் ஊழல் குறித்து மக்களிடம் பேசியதாவது :- 1955-ம் ஆண்டு நம் நாட்டின் வளர்ச்சி விகிதத்தில் (GDP)-யில் 5 சதவீதம், 1970-ம் ஆண்டில் 7 சதவீதமும், 2015-ம் ஆண்டில் 62 சதவீதமும் கறுப்பு பணத்தின் தாக்கம் இருந்ததால், தற்போது சமுதாயத்தில் மக்களின் வாழ்வில் ஏற்ற தாழ்வு உருவாகியுள்ளதாகப் பேராசிரியர் அருண்குமார் என்பவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த ஊழலைக் கட்டுப்படுத்தி இருந்தால் தனிநபர் வருமானம் முதல் கொண்டு சமூக கட்டமைப்பு வரை அனைத்தும் மாறியிருக்கும். நாட்டின் வளர்ச்சி உயர்ந்திருக்கும். பணவீக்கம் பல மடங்கு உயர்ந்திருக்கும். இதனால், சுகாதாரம், கல்வி உள்ளிட்டவற்றுக்கு பட்ஜெட்டில் பொதுமான அளவு நிதி ஒதுக்கப்படும். மக்கள் அனைவரும் கேள்வி கேட்க வேண்டும். அதற்கு வரப்பிரசாதமாக ஆர்.டி.ஐ., உள்ளது. அதனை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கான வழிமுறைகள் மிகவும் எளிது.
தமிழகத்தில் லோக் ஆயுக்தா, பீகார் போன்ற மற்ற மாநிலங்களில் உள்ளது போல, மிகவும் சரியானதாக அமைக்க வேண்டும். தற்போது, அமைக்கப்பட்டுள்ள லோக் ஆயுக்தா என்பது வெறும் கண்துடைப்பானதே. மக்கள் நேரிடையாக ஜனநாயகத்தில் பங்கேற்க வேண்டும். அதற்கு வழிவகைகள் வேண்டும். அதற்கான வழிவகை தான் கிராமசபை கூட்டம். அதனை மக்கள் பயன்படுத்த வேண்டும்," என்றார்.