நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் கடந்த நான்கு ஆண்டு காலமாக தந்தம் இல்லாத ஆண் யானை (மக்னா) வலம் வந்தது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் கடந்த நான்கு ஆண்டு காலமாக தந்தம் இல்லாத ஆண் யானை (மக்னா) வலம் வந்தது.
சாலை வழியே வரும் அந்த யானை யாரையும் தொந்தரவு செய்யாது. ஆனால், ஒரு சிலர் அந்த யானையை கல் வீசி துன்புறுத்தினர். இதனால் கோபமடைந்த மக்னா ஆட்டோ போன்ற வாகனங்களைத் தாக்கியது. ஆனால், பொதுமக்களை தாக்கவில்லை.

இந்த சூழலில், யானையை காட்டுக்குள் விரட்ட வேண்டும் அல்லது முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
40 வயதைக் கடந்துவிட்டதால் அதனை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு வர முடியாது என வனத்துறையினர் தெரிவித்தனர். இதற்கிடையே மக்னாவிற்கு வாதம் நோய் தாக்கி நடக்க முடியாமல் தவித்தது. அப்போது அந்த யானைக்கு வனத்துறை மருத்துவர் மனோகரன் சிகிச்சை அளித்தார். உடல் நலம் தேறிய மக்னா, கேரள வனப்பகுதிக்கு சென்றது.
மீண்டும் மக்னா
சில தினங்களில் மக்னா மீண்டும் தமிழக வனப்பகுதிக்கு திரும்பியது. ஆனால், இந்த முறை கூடலூர் அருகே உள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட தர்மகிரி பகுதிக்கு வந்தது. அங்குள்ள தனியார் எஸ்டேட்டில் நடமாடத் தொடங்கியது.
மக்களை அந்த யானை விரட்டவில்லை. மக்னா-வின் அமைதியைப் பார்த்த மக்கள் அதற்கு தென்னை மட்டை மற்றும் பலாக்காய்களை வழங்கினர். அவற்றை ஆசையோடு உண்ணும் யானை அந்த பகுதியிலேயே முகாமிட்டு வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு (புதன்கிழமை) கூடலூர் அருகே உள்ள பாலவாடி குறிஞ்சி நகர் ஆதிவாசி காலனிக்கு வந்த யானை அங்கிருந்த கழிவு நீர் தொட்டி மீது கால் வைத்துள்ளது. அப்போது காங்கிரீட் மூடி உடைந்து யானையின் முன்னங்கால் கழிவு நீர் தொட்டியில் இறங்கியது.
இதனால் குழந்தை தவழும் நிலையில் விழுந்த மக்னா, அங்கிருந்து எழ முடியாமல் பரிதவித்தது. இது தொடர்பாக, இன்று காலை தான் வனத்துறையினருக்கு தகவல் தெரிந்தது. அங்கு சென்று வனத்துறையினர் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் சுமார் 3 மணி நேரம் போராடி யானையை கழிவு நீர் தொட்டியிலிருந்து வெளியே எடுத்தனர்.
ஆனால், அப்போது மக்னா பலியாகியிருந்தது. விழுந்ததில் நெஞ்சு பகுதி பலத்த காயம் அடைந்திருந்தது என்றும், யானை உயிரோடு நீண்ட நேரம் போராடி உள்ளது என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
நீண்ட நாட்களாக மக்களோடு மக்களாக குழந்தை தன்மையுடன் வலம் வந்த யானை இறந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.