கோவை: முதியோர் உதவி தொகை வழங்க பலமுறை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக மதுக்கரை ஒன்றிய பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
கோவை: முதியோர் உதவி தொகை வழங்க பலமுறை மனு அளித்தும், நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பதாக மதுக்கரை ஒன்றிய பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று மதுக்கரை ஒன்றியதிற்கு உட்பட்ட குமிட்டிபதி, ரங்கசமுத்திரம், காளியாபுரம், மயிலாம்பாறை, எட்டிமடை பேரூராட்சி, சாவடி பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் முதியோர் உதவித் தொகை கோரி கோவை மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரைக்கும் அவர்கள் மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், முதியோர் உதவி தொகை வழங்காமல் அலைக்கழிப்பதாகவும், இது குறித்து பலமுறை மனு அளித்தும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி அப்பகுதியைச் சேர்ந்த கோவை மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது :- முதுமை காரணமாக வேலைக்கு செல்ல முடியாத சூழலில் அரசு சார்பில் வழங்கப்படும் உதவி தொகையும் கிடைக்கப் பெறாமல் சிரமப்படுகின்றனர். மேலும், குமிட்டிபதி பகுதியில் பல வருடங்களுக்கு முன்பு கட்டி தரப்பட்ட தொகுப்பு வீடுகளில் 110 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், சுமார் 14 வீடுகள் இடிந்து விழும் தருவாயில் உள்ளது. பழைய தொகுப்பு வீடுகளை இடித்து விட்டு, புதிதாகக் கட்டி தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு அவர்கள் கூறினர்.