கோவை: தொடர் கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை: தொடர் கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க இன்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழைக் காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகக் கனமழை பெய்தது. மேலும், சிறுவாணி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தின் சுற்றுலாத் தலங்களில் முக்கிய ஒன்றாகத் திகழும் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதன் காரணமாக கடந்த ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் பெரும்பாலும் கோவை குற்றாலம் மூடியே கிடந்தது.
பின்னர், மழையின் அளவு குறைந்ததால் 48 நாட்களுக்குப் பிறகு கடந்த 4-ம் தேதி கோவை குற்றாலம் மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழைப் பொழிவு மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால், கோவை குற்றாலத்தில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த 9-ம் தேதி முதல் இரண்டு நாட்களாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இதனிடையே, மழையின் அளவு தொடர்ந்து நீடிப்பதால், கோவை குற்றாலத்தில் 3-வது நாளாக இன்று மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேபோல, பில்லூர் அணை நீர்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையினால் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள பர்லிக்காடு மற்றும் பூச்சமரத்தூர் சூழல் சுற்றுலாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
