கோவை: கேரள மாநில மக்கள் மழையால் பெரும் துயரத்தில் உள்ள நிலையில் அரசியல் வித்தியாசங்களைப் பேச விரும்பவில்லை எனவும் அரசு மேற்கொண்டு வரும் அனைத்து பணிகளுக்கும் எதிர்கட்சிகள் ஒன்றினைந்து உதவுவோம் என்று கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
கோவை: கேரள மாநில மக்கள் மழையால் பெரும் துயரத்தில் உள்ள நிலையில் அரசியல் வித்தியாசங்களைப் பேச விரும்பவில்லை எனவும் அரசு மேற்கொண்டு வரும் அனைத்து பணிகளுக்கும் எதிர்கட்சிகள் ஒன்றினைந்து உதவுவோம் என்று கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.
கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கட்சி நிர்வாகியை நலம் விசாரிப்பதற்காக கேரள மாநில முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி வருகை தந்தார். முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற தலைவரான கருணாநிதி, கேரள மக்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார் எனவும் அவரது மறைவு வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்தார்.
கேரள மக்கள் மழையால் சொல்லில் அடங்கா துயரத்திலும், பயத்திலும் ஆழ்ந்துள்ளதாகக் கூறிய அவர், இந்த சூழலில் அரசியல் வித்தியாசங்கள் குறித்து பேச விரும்பவில்லை என தெரிவித்தார். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய நிவாரணம் கிடைப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.

மேலும், மாநில அரசுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக கூறிய உம்மன் சாண்டி, மத்திய அரசின் உதவியில்லாமல் மீட்பு பணிகளை செய்துவிட முடியாது என்றும் மத்திய அரசு மேற்கொண்டு வரும் மீட்பு பணிகளை வரவேற்பதாக தெரிவித்தார்.

மீட்பு பணிகளுக்கு பிறகு புனரமைப்பிற்காக தேவைப்படும் நிதி குறித்து மாநில அரசு ஆய்வு செய்து மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கும் எனவும் அதனை வழங்க அனைத்து கட்சிகளும் இணைந்து வலியுறுத்துவோம் எனவும் அவர் கூறினார். மேலும், மழை வெள்ள பாதிப்புகளுக்காக தமிழக அரசு கேரள அரசிற்கு 5 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளதற்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.