கோவை: மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மோட்டார் தொழில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
கோவை: மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட திருத்தத்தைக் கண்டித்து நாடு முழுவதும் மோட்டார் தொழில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக கோவையில் ஆட்டோ, டெம்போ, வேன், டாக்சி உள்ளிட்ட வாகனங்களை இயக்குபவர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டுள்ளனர்.
12 ஆட்டோ தொழிற்சங்கங்கள் சார்பில், கோவையில் 13 ஆயிரம் ஆட்டோக்கள் இயங்கவில்லை என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதேபோல டெம்போ, டாக்சி, மினி வேன், டூரிஸ்ட் வேன் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் மற்றும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் பணிமனை உரிமையாளர்கள், தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்கள் சம்மேளனம் மாநில துணைத்தலைவர் மற்றும் கோவை மாவட்ட பொதுச்செயலாளர் சுகுமாரன் நம்மிடம் கூறுகையில், "கோவையில் 90 சதவீதம்
மோட்டார் தொழில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
மத்திய அரசின் போக்குவரத்து சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க வேண்டும், இன்சூரன்ஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும்." என்றார்.
இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் தொழிற்சங்கங்களைச் சாராத, தனியார் நிறுவனங்களை சார்ந்த தொழிலாளர்கள் பங்குபெறவில்லை என்பதால் பள்ளி, கல்லூரி செல்லும் வாகனங்கள், கால் டாக்சிகள், பன்னாட்டு நிறுவனங்களின் ஆட்டோக்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.