கோவை: கோவை ரயில் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் செல்பி எடுத்தால் இரண்டு மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்று கோவை ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.
கோவை: கோவை ரயில் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் செல்பி எடுத்தால் இரண்டு மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்று கோவை ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது.
சேலம் கோட்டத்தில் வருமானத்தில் இரண்டாவது பெரிய ரயில் நிலையமாக கோவை மத்திய ரயில்நிலையம் உள்ளது. அதே போல் சென்னைக்கு அடுத்து கோவை ரயில்நிலையம் தான் முக்கிய ரயில் நிலையம் கருதப்படுகிறது.
தொழில் நகரமான கோவையிலிருந்து சென்னை, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கும் கேரளா மாநிலம் திருச்சூர், பாலக்காடு, கொச்சின், திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் நாட்டின் பிற மாநிலங்களுக்கும் நூற்றுக்கணக்கான ரயில்கள் தினமும் இங்கு இயக்கப்படுகின்றன.
இதனால் ஆயிரக்கணக்கான பயணிகளின் இங்கு வந்து செல்கின்றன. அவ்வாறு வரும் பயணிகளில் சிலர் குறிப்பாக இளைஞர்கள் ரயில் நிலையங்களில் ரயில் முன் நின்று செல்பி எடுப்பது, தண்டவாளங்களில் செல்பி எடுப்பது என ஆபத்தை உணராமல் செல்பி எடுக்கின்றனர். இதனால் அவர்களுது உயிர்களுக்கும் மற்ற பயணிகளுக்கும் ஆபத்தைத் தரும்.
இதனைத் தடுக்க ரயில்நிலையங்களில் செல்பி எடுப்பதை ரயில்வே அமைச்சகம் தடை செய்துள்ளது. ஆனால் அதனையும் மீறி சிலர் செல்பி எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அவ்வாறு செல்பி எடுப்பவர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை ரயில்வே காவல்துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து கோவை சரக ரயில்வே காவல்துறை ஆய்வாளர் லாரன்ஸ் சிம்ப்ளிசிட்டி-க்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "ரயில் நிலையங்களில் அல்லது தண்டவாளங்களில் செல்பி எடுத்தால் அவர்களை கைது செய்து 2 மாதம் சிறையில் அடைக்கவும், 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும் எங்களுக்கு உரிமை உள்ளது.
இதுவரை கோவை சரகத்தில் செல்பி காரணமாக யாரும் கைது செய்யப்படவில்லை. அவ்வாறு ஈடுபடுபவர்களை முதல் தடவை எச்சரிக்கை செய்து அனுப்பிவிடுகிறோம். மேலும், அவர்கள் அதே தவறு செய்தால், அவர்களுக்கான தண்டனை வழங்கப்படும்." என்றார்.
செல்பி எடுத்தால் அபராதம் அல்லது கைது என்கிற விழிப்புணர்வு பொதுமக்களிடையே போதுமான அளவு இல்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் A.மனோஜ் கூறுகையில், "ரயில் நிலையங்களில் செல்பி எடுத்தால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும், அதற்கு விதிக்கப்படும் தண்டனைகள் குறித்தும் போதுமான அளவு சுவரொட்டிகள் இல்லை. அதே நேரம் ரயில்வே நிர்வாகமும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. ரயில்வே துறை இது தொடர்பாக போதுமான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்." என்றார்.
செல்பி மோகத்தால் பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. இதனை தடுக்க மக்களிடையே அரசாங்கம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.