நீலகிரி: தென்மேற்கு பருவமழை தொடர்வதால் நீலகிரியில் காய்கறி வரத்து குறைந்து, விலை அதிகரித்து வருகிறது.
நீலகிரி: தென்மேற்கு பருவமழை தொடர்வதால் நீலகிரியில் காய்கறி வரத்து குறைந்து, விலை அதிகரித்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டம் என்பதால், இங்கு கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், காளிபிளவர், பீன்ஸ், உருளைக்கிழங்கு உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிரிடப்பட்டு வருகிறது. குளிர் பிரதேசத்தில் இந்த மலை காய்கறிகள் அதிக விளைச்சலைத் தருவதால், நீலகிரி மாவட்ட விவசாயிகள் மலை காய்கறிகளை அதிகளவில் பயிரிட்டு வருகிறார்கள்.

அறுவடை செய்யப்படும் மலை காய்கறிகள் சரக்கு வாகனங்கள், லாரிகள் மூலம் மேட்டுப்பாளையம், கோவை, அவினாசி, திருச்சி, சென்னை, பெங்களூர் போன்ற பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

பருவமழை
நீலகிரியில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மலை காய்கறிகள் பயிரிடப்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி சேறாக உள்ளது. அதன் காரணமாக காய்கறிகளை அறுவடை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், தொடர் மழையால் காய்கறிகள் அழுகியும் வருகின்றன. சில விவசாயிகள் முன்கூட்டியே காய்கறிகளை அறுவடை செய்து விட்டனர். இருந்தாலும், தென்மேற்கு பருவமழையால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டுக்கு மலை காய்கறிகள் வரத்து குறைவாக உள்ளது.

இதனால் காய்கறிகள் விலை அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக பொதுமக்கள் தங்களது வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை முழுமையாக வாங்க முடியாமல் அவதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து வியாபாரி பிரபாகரன் கூறுகையில், "ஊட்டி நகராட்சி சந்தையில் பீட்ரூட் கிலோ ரூ.35 முதல் ரூ.38 வரையும், உருளைக்கிழங்கு ரூ.55 முதல் ரூ.70 வரையும், கேரட் ரூ.30 முதல் ரூ.40 வரையும், முட்டைக்கோஸ்-ரூ.12, பீன்ஸ்-ரூ.65, முள்ளங்கி-ரூ.20, டர்னீப்- ரூ.30, நூல்கோல்-ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த பீன்ஸ் வரத்து குறைவால் ரூ.65 ஆக விலை அதிகரித்துள்ளது. விளைநிலங்களில் விவசாய தொழிலாளர்கள் அறுவடை பணியில் ஈடுபட்டால், அவர்களது கால்கள் சேற்றில் பதியும் நிலை காணப்படுகிறது. காய்கறிகள் வரத்து குறைவால் வெளியிடங்களுக்கு அனுப்புவதும் குறைந்து உள்ளது. மழை குறைந்தால் தான் காய்கறிகள் வரத்து அதிகரிக்கும்." என்றார்.