நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயமடைந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தமிழக – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காட்டு யானை தாக்கியதில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயமடைந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தமிழக – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
கூடலூர் அருகேயுள்ள தொரப்பள்ளி பகுதி முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ளது. இதன் காரணமாக தினம்தோறும் முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. அவ்வாறு வரும் யானைகள் சாலையில் நடப்பது அன்றாட நிகழ்வாகும்.

இந்த நிலையில், வழக்கம் போல நேற்று இரவு ஊருக்குள் நுழைந்த யானைகள் இன்று காலை 7 மணியளவில் மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பின.
அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் மதரசா பள்ளிக்குச் சென்று திரும்பியுள்ளனர். அவர்கள் எதிரே யானை வருவதைக் கண்டு ஓடியுள்ளனர். அதில், மூன்று குழந்தைகள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். காட்டு யானை கீழே கிடந்த குழந்தைகள் அருகே வந்த நிலையில், அப்பகுதி மக்கள் யானையை விரட்டியதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் தமிழக – கர்நாடக தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக வனத்துறையினர் உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, விரைவில் காட்டு யானை ஊருக்குள் நுழைவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக முதுமலை புலிகள் காப்பக அதிகாரிகள் உறுதி அளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டம் காரணமாக தமிழக – கர்நாடகா இடையே சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.