கோவை: 21-வது வார்டு சுண்டப்பாளையம் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மட்டத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகாலை சரிசெய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியின் நிர்வாகிகள் துணை ஆணையாளர் காந்திமதியிடம் இன்று மனு அளித்தனர்.
கோவை: 21-வது வார்டு சுண்டப்பாளையம் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மட்டத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகாலை சரிசெய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியின் நிர்வாகிகள் துணை ஆணையாளர் காந்திமதியிடம் இன்று மனு அளித்தனர்.
முத்தண்ணன் குளத்தை ஒட்டி அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் சென்ற வருடம் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் கட்டப்பட்டது. சாலை மட்டத்தின் அளவை விட உயரமாகவும், குடியிருப்புகளை விட உயரமாகவும் இந்த வடிகால் வாரிய கட்டுமானப் பணிகள் கட்டப்பட்டுள்ளதால், மழைநாட்களில் தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விடுவதாக புகாரளித்து வந்தனர். இதேபோல, தற்போது தடாகம் சாலையிலும், மழைநீர் வடிகால் கட்டப்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்து அப்பகுதி மக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், 21-வது வார்டு சுண்டப்பாளையம் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலை மட்டத்திற்கு மேல் கட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகாலை சரிசெய்யக்கோரியும், தடாகம் சாலையில் இதேபோல் கட்டப்பட்டு வரும் மழைநீர் வடிகாலை உடனே திருத்தி அமைக்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியின் நிர்வாகிகள் துணை ஆணையாளர் காந்திமதியிடம் இன்று மனு அளித்தனர்.

இதுகுறித்து 21-ம் வார்டு முன்னாள் கவுன்சிலர் மற்றும் சி.பி.ஐ., (மார்க்சிஸ்ட் -லெனினிஸ்ட்) கட்சியின் மாநகர செயலாளர் எம்.எஸ்.வேல்முருகன் கூறுகையில், "சாலை மற்றும் குடியிருப்புகளின் மட்டத்தைவிட உயரமாக மழைநீர் வடிகால் கட்டப்பட்டதால் இப்பகுதியில் வசிக்கும் முதியோர்களும், பொதுமக்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். பருவமழை தொடங்கியுள்ளதால் குடியிருப்பு பகுதியில் நீர்தேங்கி டெங்கு நோய் பரவ அதிக வாய்ப்புள்ளது. எனவே, கட்டப்பட்ட மழைநீர் வடிகாலை உடனடியாக சரிசெய்ய வேண்டியும், இதேபோல, தடாகம் சாலையில் கட்டப்பட்டு வரும் வடிகாலை திருத்தி அமைக்க வேண்டியும் துணை ஆணையாளரிடம் மனு அளித்துள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்" என்றார்.
மேலும் இது தொடர்பான செய்திகளுக்கு:
பாதாளத்தில் வீடு; பரிதவிக்கும் எளிய மக்கள் - கிளிக் செய்யவும்