கோவை: கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி கொடுக்கும் போது பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி பயிற்சியாளர் மாடியில் இருந்து தள்ளியதில் மாணவி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி கொடுக்கும் போது பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி பயிற்சியாளர் மாடியில் இருந்து தள்ளியதில் மாணவி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலி ஆவணங்கள்
கோவையில் மாணவி லோகேஸ்வரியின் மரணத்திற்கு காரணமான ஆறுமுகம் என்பவர் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பதும், அவர் கல்லூரிக்கு அனுப்பிய கடிதங்கள் அனைத்தும் போலியானவை என்றும் நேற்றைய விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில், இது போன்ற முறைகேடான ஒத்திகைகளை இவர் தனியாக செய்கிறாரா? இல்லை, இவர் உட்பட ஒரு குழுவாக பல்வேறு கல்லூரிகளில் இது போன்ற ஒத்திகைகள் நடைபெற்றுள்ளதா? போன்ற விசாரணையை போலீசார் நடத்தி வருகின்றனர்.
தீவிர விசாரணை
மாணவி லோகேஷ்வரி உயிரிழந்தது தொடர்பாக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பேரூர் ஆய்வாளர் மனோகரன், ஆலந்துறை ஆய்வாளர் தங்கம் ஆகிய இருவர் அடங்கிய தனிப்படையினர், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ஆறுமுகம் தொடர்பான படிப்பு, பணி, முந்தைய பயிற்சிகள், அவரின் பின்னணி தொடர்பான ஆவணங்கள் ஆகியவை குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. இதில் ஆறுமுகத்துடன் இருந்ததாக சதீஷ், கோபாலகிருஷ்ணன், வினிதா ஆகியோரை ஏற்கனவே காருண்யா காவல்நிலையத்தில் போலீசார் விசாரணை செய்த நிலையில், இதில் இன்று அசோக் மற்றும் தாமோதர் ஆகிய இருவரை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் அசோக் என்பவர் மட்டும் கைது செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பின்னணி
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்துள்ளார். இதனால் தன் வாழ்வாதாரத்திற்காக திருநெல்வேலியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்துள்ளார். போலியோ பாதிப்பால் இடது கால் சற்று ஊனமாக இருப்பதால், இவரால் அதிக நேரம் நிற்க முடியாது என்பதற்காக அந்த கடையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
பிறகு மற்றொரு நபரின் உதவியுடன், கன்னியாகுமரியில் உள்ள பள்ளியில் வார்டனாக சேர்ந்துள்ளார். அதற்கு பிறகான ஆறுமுகத்தின் வாழ்க்கை தான் மர்மமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
டிப்ளமோ உள்ளிட்ட படிப்புகளை தொலைதூர கல்வியில் படித்ததாக காவல்துறை விசாரணையில் ஆறுமுகம் தெரிவித்துள்ளார். கடந்த 2011-ம் ஆண்டு முதல் தேசிய பேரிடர் மேலாண்மை என்ற பெயரில் கல்லூரிகளுக்கு கடிதம் அனுப்பி பாதுகாப்பு ஒத்திகையையும் நடத்தி வந்துள்ளார். இதுவரை 1,047 கல்லூரிகளில் இது போன்று ஒத்திகை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளதாகவும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்களுக்கு பாதுகாப்பு ஒத்திகை பயிற்சி கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மோசடி கும்பலில் ஒருவரா?
போலியான லெட்டர் பேட் தயாரிக்க ஆறுமுகத்திற்கு உதவியதாக, ஈரோட்டைச் சேர்ந்த அசோக் மற்றும் தாமோதரன் ஆகியோரை காவல்துறையினர் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தற்போதைய நிலையில், ஆறுமுகத்திற்கு உதவியாக படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் என மூன்று பேர் உள்ளனர்.

அரசு தேர்வுகள் எழுதும் போது, இது போன்ற பயிற்சியில் உதவியதாக குறிப்பிட்டால், கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் போன்ற போலி ஆசை வார்த்தைகள் கூறி வைத்திருந்ததும் தற்போது தெரியவந்துள்ளது.
மிக முக்கியமாக, கடந்த 2011-ம் ஆண்டுக்கு முன் தேசிய பேரிடர் மேலாண்மை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நடத்திய வேறு ஒரு குழுவில் ஆறுமுகம் வேலை செய்து வந்துள்ளதாகவும், அந்த குழுவை சேர்ந்த நபர்கள் யார்? அவர்களாவது உண்மையிலேயே தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பை சேர்ந்தவர்கள்தானா? போன்ற விசாரணைகள் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.