கோவை: கோவை மாநகராட்சி மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் 'தூய்மை பாரதம் பசுமை பாரதம்' என்ற நிகழ்ச்சி, அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அரங்கில் இன்று நடைபெற்றது.
கோவை: கோவை மாநகராட்சி மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனம் சார்பில் 'தூய்மை பாரதம் பசுமை பாரதம்' என்ற நிகழ்ச்சி, அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அரங்கில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், சுற்றுச்சூழலைத் தூய்மையாக பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவர்களிடம் விளக்கப்பட்டது. தொடர்ந்து, தூய்மை பாரதம் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும், மாநகராட்சியில் பணிபுரிந்துவரும் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபரணங்கள் வழங்கப்பட்டது. முன்னதாக, தூய்மை பாரதம் பசுமை பாரதம் உறுதிமொழி மாணவர்களால் ஏற்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் பேசுகையில், “தேசிய அளவில் நடத்தப்பட்ட தூய்மை நகரங்களுக்கான பட்டியலில் கோவை 16-வது இடத்தில் உள்ளது. அடுத்த வருடம் நடத்தப்படும் ஆய்வில் முன்னிலை பெற பொதுமக்களின் ஒத்துழைப்பும், மாணவர்களின் ஒத்துழைப்பும் அவசியம். எனவே, பள்ளி மாணவர்கள் தங்களின் பள்ளி வளாகம், வீடு ஆகியவற்றைச் சுத்தமாக பராமரிக்க வேண்டும். தூய்மையின் முக்கியத்துவம் குறித்து உங்களின் நண்பர்கள், உறவினர்களிடம் எடுத்துக்கூற வேண்டும்,” என்றார்.

தொடர்ந்து, அவர் பேசுகையில், “துப்பரவு எனும் மகத்தான பணி செய்து வரும் தூய்மை பணியாளர்கள், அரசால் தடைசெய்யப்பட்டுள்ள உயிருக்கு ஆபத்தான பாதாள சாக்கடையில் இறங்குதல், உபகரணங்கள் இல்லாமல் துப்பரவு பணிகளை செய்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இதுகுறித்த புகார்களை மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், இதுபோன்ற தூய்மை பாரதம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படும்,,” என்றார்.

பின்னர், பள்ளி மாணவர்கள் ஊர்வலமாகச் சென்று தூய்மை பாரதம் மற்றும் தடை செய்யப்பட்ட துப்புரவு பணிகள் குறித்த நோட்டீஸ்களை பொதுமக்களிடம் வழங்கினர்.
