கோவை : தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டது போல சூழல் நிலவுவதாக ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் வாசுகி தெரிவித்துள்ளார்.
கோவை : தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசர நிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டது போல சூழல் நிலவுவதாக ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் வாசுகி தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி இன்று கோவை பிரஸ் கிளப் அரங்கில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- தமிழகத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது போல் சூழ்நிலை தற்போது உள்ளது. ஜனநாயகம், சமத்துவம், பெண்விடுதலை ஆகியவை கேள்விக்குறியாகியுள்ளன. மக்களை பாதிக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தில் விவசாய நிலங்களும், விவசாயமும், விவசாயிகளும் அழிக்கப்படுகின்றனர். இதில், ஏராளமான பெண் விவசாயிகளும் பாதிக்கப்படுகின்றனர். இந்த பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து கருத்து கேட்கவோ, கருத்து தெரிவிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்தப் பகுதிகளில் அறிவிக்கப்படாத 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதேபோல, கோவை மக்களை பாதிக்கும் வகையில் சூயஸ் நிறுவனத்தோடு 24 மணி நேர குடிநீர் திட்டம் ரூ. 3,150 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி வசம் இதற்கான தொழில்நுட்பங்கள் கட்டமைப்புகள் இல்லை எனும்பட்சத்தில், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து, அவர்களிடமிருந்து கட்டமைப்புகளையும், தொழில்நுட்பத்தையும் உருவாக்கிக் கொண்டு குடிநீர் வினியோகத்தை அரசாங்கமே மேற்கொள்ளலாம். ஆனால், 26 வருடங்களுக்கு பல கோடி ரூபாய் நிதியில் பன்னாட்டு நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து இருப்பதால் பிரச்சினைகள் இன்னும் அதிகமாகவே வாய்ப்புள்ளது.
மேலும், டெல்லியில் இந்நிறுவனம் திறம்பட செயல்படவில்லை. அப்பகுதி மக்கள் கட்டணம் செலுத்தாததால் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது. எனவே, எதிர்காலத்தில் இதே நிலைமை மக்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ள சி.ஏ.ஜி., அறிக்கையில் செம்பரம்பாக்கம் ஏரி உடைப்பிற்கு மனிதத் தவறுகள்தான் காரணம் என்று கூறப்பட்டுள்ளது. அந்த ஏரியைப் பராமரித்து வந்தது சூயஸ் நிறுவனம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில், கோவை மாநகராட்சி பன்னாட்டு சூயஸ் நிறுவனத்தோடு கையெழுத்திட்டுள்ள 24 மணிநேர குடிநீர் திட்ட ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். இத்திட்டம் பற்றிய முழுமையான தகவல்களும், ஒப்பந்த நகல்களும் தருவதற்கு மாநகராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது, தகவல்களைக் கேட்பவரை வதந்தி பரப்புவதாகக் கூறி கைது செய்கிறது. இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட உள்ளது, என்றார்.
மேலும், அவர் பேசுகையில், "சி.ஏ.ஜி.,யின் அறிக்கையில் ஈஷா யோகா மையம் கட்டப்பட்டத்தில் உள்ள பல்வேறு விதிமீறல்கள் குறித்தும், அதற்கு அரசு துணைபோவது குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளது. இவற்றை ஆய்வு செய்து விதிகளைப் பின்பற்றாத ஈஷா மையம் மற்றும் அதன் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கேட்டுக்கொண்டார்.