கோவை: கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது, பயிற்சியாளர் தள்ளியதில் உயிரிழந்த மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை: கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது, பயிற்சியாளர் தள்ளியதில் உயிரிழந்த மாணவியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கோவை அருகே நரசீபுரம் பகுதியில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் நேற்று மாலை 4 மணி அளவில் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சியானது நடைபெற்றது. தேசிய பேரிடர் மேலாண்மையை சேர்ந்த பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் 20 மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வந்தார்.
கல்லூரியின் 2-வது மாடியில் இருந்து மாணவர்கள், மாணவிகள் கீழே விரிக்கப்பட்ட வலையில் குதித்து பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது, பி.பி.ஏ., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி லோகேஸ்வரி (18) என்பவர் மாடியில் இருந்து குதிக்க பயந்தபடி அமர்ந்திருந்தார். அவரை கீழே குதிக்கும்படி தெரிவித்த பயற்சியாளர் ஆறுமுகம், திடீரென மாணவியை கீழே தள்ளிவிட்டார். அப்போது, எதிர்பாராதவிதமாக முதலாவது மாடியின் சன்-சேடில் மாணவியின் கழுத்து பகுதி மோதி பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து, மாணவி லோகேஸ்வரி சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால், வழியில் மாணவின் உயிர் பிரிந்தது. ஆலாந்துறை காவல்நிலைய போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவி லோகேஸ்வரியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட நிலையில், பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோர்கள் மாணவியின் உடலைப் பெற்றுக் கொண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க பேரூர் காவல் ஆய்வாளர் மனோகரன், ஆலந்துறை காவல் ஆய்வாளர் தங்கம் தலைமையிலான இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.