கோவை: நான்கு நாட்கள் நடைபெறும் 18-வது ஆண்டு அக்ரி இண்டெக்ஸ் 2018 வேளாண் கண்காட்சி இன்று கோவை கொடிசியா வளாகத்தில் தொடங்கியது.
கோவை: நான்கு நாட்கள் நடைபெறும் 18-வது ஆண்டு அக்ரி இண்டெக்ஸ் 2018 வேளாண் கண்காட்சி இன்று கோவை கொடிசியா வளாகத்தில் தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வேளாண்மைத்துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு தலைமை விருந்தினராகவும், மேலும் சட்டப்பேரவைத் துணைத்தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் கே.ராமசாமி, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் கே.விஜயகார்த்தியேன் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கே.ராமசாமி பேசுகையில், "விவசாயத்தில் உழைப்பதற்கு ஆளில்லை என யாரும் கவலைப்பட வேண்டாம். அந்த அளவிற்கு இன்று நவீன கருவிகள் வந்துவிட்டன. அதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்." என்றார்.

பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், "மழை நீர் கடலில் கலந்து வீணாக்காமல், பூமிக்கடியில் செலுத்தி நிலத்தடி நீர் வளத்தை செயற்கையாக பெருக்க வேண்டும். இதனால் மழை இல்லாத காலத்தில் விவசாயம் மேம்படும். இதற்கு அமைச்சர் பெருமக்கள் வழிவகை செய்ய வேண்டும்." என்றார்.

அமைச்சர் இரா. துரைக்கண்ணு பேசுகையில், "குறைந்த அளவு நீரினை கொண்டு விவசாயம் செய்ய இக்கண்காட்சியில் கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. துள்ளிய மேலாண்மை, சூரிய சக்தி, நுண்ணுயிர் விவசாயம் போன்றவற்றுக்கு தேவையான கருவிகள் தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் இதில் கலந்துகொண்டுள்ளன. எனவே இக்கண்காட்சியினை மாணவர்கள், விவசாயிகள், மக்கள் என அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும்." என்றார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "விவசாய தொழில்களை மேம்படுத்த தொழில்நுட்பங்களை சார்ந்த கருவிகள் இதில் இடம் பெற்றுள்ளன. இதனை பயன்படுத்த செயல் முறை விளக்க கருத்தரங்கு நடைபெறவுள்ளன. 70 ஆண்டுகள் பிரச்சினையான அத்திக்கடவு-அவினாசி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார்." என்றார்.

விவசாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துதல் என்ற நோக்கத்துடன் ஜூலை 13 முதல் 16 வரை நடைபெறும் இக்கண்காட்சியில் 450 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த கண்காட்சிக்கு காலை 10 மணி முதல் மாலை 6 வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இக்கண்காட்சிக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா முழுவதும் இருந்து சிறந்த இயந்திர உற்பத்தியாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இதன் மூலம் திறமையான மற்றும் பயிற்றுவிக்கப்பட்ட பண்ணைத் தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுசெய்ய, தொழில் நுட்பம் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு தீர்வு வழங்குதல் இக்கண்காட்சியின் சிறம்பம்சமாக கருதப்படுகிறது.
வேளாண் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், நவீன நீர் பாசன கருவிகள் மற்றும் தானியங்கிக் கருவிகள், கால்நடை பாராமரிப்பு, வேலிகள், பசுமை வீடுகள், மாடித்தோட்டம், பயிர் ஊட்டச்சத்து மேலாண்மை, நீர் குட்டை லைனிங், மதிப்புக் கூட்டப்பட்ட தென்னை நார், உணவு பதப்படுத்தும் இயந்திரங்கள், தேனீ வளர்ப்பு போன்றவற்றை இக்கண்காட்சியில் காணலாம்.

விழாவின் ஒரு பகுதியாக மலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.