மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட காட்டு யானையை, வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணையில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட காட்டு யானையை, வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி விட்டனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகிளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை கடந்த பத்தாம் தேதி அதன் முழு கொள்ளளவான நூறு அடியை எட்டி நிரம்பியது. இதன் பிறகும் மழை தொடர்ந்து அணைக்கான நீர்வரத்து அதிகரித்தபடி இருந்ததால் அணையின் பாதுகாப்பு கருதி அதன் உபரி நீர் பவானியாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.
இந்த நிலையில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள சமயபுரம் நீர்மின் நிலையம் அருகே இன்று அதிகாலை காட்டு யானை ஒன்று ஆற்றைக் கடந்து வனப்பகுதிக்குள் செல்ல முற்பட்டது. அப்போது, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் யானை சிக்கிக்கொண்டது. ஆற்றினுள் சிறிது தூரம் சென்ற யானை தண்ணீரின் வேகத்திற்குப் பயந்து நீரில் தத்தளித்தபடியே மீண்டும் ஊர்பகுதியில் உள்ள கரைக்கே திரும்பியது.

இது குறித்து தகவல் கிடைத்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கரையோரத்தில் நின்று கொண்டிருந்த யானையை, மீண்டும் ஆற்றுக்குள் சென்று சிக்கி விடாமலும், ஊருக்குள் நுழைந்து பாதிப்பு ஏற்படுத்தாத வகையிலும், அதனை அருகில் இருந்த மற்றொரு வனப்பகுதியை நோக்கி விரட்டினர்.
இதனிடையே, யானையின் நடமாட்டம் குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது :- ஆற்று நீரில் சிக்கி தவித்த இந்த ஆண் காட்டு யானை கடந்த ஒரு வாரகாலத்திற்கும் மேலாக சமயபுரம் மற்றும் அருகில் உள்ள ஊர் பகுதிகளில் சுற்றித் திரிகிறது. இதனை நெல்லிமலை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். இந்த யானை மீண்டும் குடியிருப்புப் பகுதிக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்.