கோவை: நொய்யல் ஆற்றில் பிளீச்சிங் கழிவுகள் கலப்பதால் தற்போது ஆற்று நீர் நுரை பொங்க பாய்ந்து வருகிறது.
கோவை: நொய்யல் ஆற்றில் பிளீச்சிங் கழிவுகள் கலப்பதால் தற்போது ஆற்று நீர் நுரை பொங்க பாய்ந்து வருகிறது.
நீண்ட நாட்களுக்குப் பின் உயிர்த்தெழுந்த நொய்யல் ஆற்றில் தற்போது கலக்கப்படும் கழிகளினால் நுரை பொங்கிவருவது இயற்கை ஆர்வலர்களையும் விவசாயிகளையும் வேதனையடையச் செய்துள்ளது.
இது குறித்து கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த மணிகண்டன் கூறுகையில், "புட்டுவிக்கி குளம் அருகே பிளீச்சிங் கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் காரணமாகவே தற்போது நொய்யலில் நுரை பொங்கி வருகிறது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் இரண்டு முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. முன்பைவிட தற்போது அதிக அளவில் நுரை பொங்கி வருகிறது. இதனால் அதிகபட்ச அளவில் கழிவு நீர் கலந்திருப்பதாக சந்தேகம் எழுகிறது. உடனடியாக இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும்." என்றார்.
மேலும், சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயண சமுத்திரம், பேரூர் பெரியகுளம் மற்றும் செங்குளம் ஆகிய குளங்களில் இருந்து வரும் நீர் குனியமுத்தூர் வாய்க்காலில் நுழையாமல் தடுக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தொடர்பு கொள்ள முயன்ற போது, அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை.