திருப்பூர்: திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இலவச பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
திருப்பூர்: திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இலவச பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
ஊத்துக்குளி ரோடு, பாரப்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளியில், 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
கிராமப்புறத்தில் உள்ள இப்பள்ளிக்கு சுற்றுவட்டாரத்தில் இருந்து, நூற்றுக்கணக்கான மாணவர்கள் பள்ளிக்கு வருகின்றனர்.
குளத்துப்பாளையத்தில் இருந்து பாரப்பாளையம் பள்ளிக்கு 2.5 கி.மீ. தொலைவு செல்ல வேண்டும். இதனால், இப்பள்ளிக்கு வரும் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்தது.
பெற்றோரிடம் நிலையை எடுத்துக்கூறி ஆசிரியர்கள் மாணவர்களை பள்ளிக்கு வர வைத்தனர். இந்த சூழலில், குளத்துப்பாளையத்தில் இருந்து நடந்தும், சைக்கிள் மூலமாகவும் பள்ளிக்கு வரும், 50 மாணவர்களின் வசதிக்காக வாடகை பேருந்து ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி மேலாண்மை குழு, தன்னார்வலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகம், அன்னையர் குழு, தலைமை ஆசிரியர், கல்வியாளர், பேஸ்புக் நண்பர்கள் இணைந்து ஒரு பேருந்தை வாடகைக்கு எடுத்துள்ளனர்.
இந்த பேருந்து தினமும் குளத்துப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு வீடு, வீடாகச் சென்று ஒன்று முதல் ஐந்தாவது வரை படிக்கும் பள்ளி குழந்தைகளை அழைத்துச் சென்று பள்ளியில் விடும். அதே போல், மாலையில் வீட்டுக்கு சென்று அவர்களை வீட்டில் இறக்கி விடுவர்.

இந்த பேருந்துக்கான வாடகை மற்றும் எரிபொருள் செலவு என மாதம் ரூ.14 ஆயிரத்தை அனைவரும் பகிர்ந்து கொடுக்கின்றனர். ஏழை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இலவச பேருந்து வசதியை செய்து கொடுத்த நிகழ்வு மாணவர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.