கோவை: குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் பிரச்சார பயணம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தொடங்கியது.
கோவை: குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தப் பிரச்சார பயணம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தொடங்கியது.
கோவை மாவட்ட சமூகநல பாதுகாப்புத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் சார்பாக குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார பயணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து இன்று தொடங்கியது. 18 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் உளவியல் மற்றும் உடல் ரீதியாகவும் மற்றும் பாலியல் வன்கொடுமையாலும் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

குழந்தைகள் பாதிக்கப்பட்டால் குடும்ப கெளரவம், அறியாமை காரணமாக பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிப்பதில்லை. இதனால் குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் மீண்டும் மீண்டும் குற்றத்தில் ஈடுபடுகின்ற சூழல் உருவாகியுள்ளது. குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பவர்களுக்கு போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அதிகபட்ச தண்டனை வழங்கப்படுகிறது.

இச்சட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளிடம், தங்களை தாங்களே பாதுகாப்பது, குற்றவாளிகளுக்கான தண்டனை குறித்து நாடகம், பாட்டு, இசை நிகழ்ச்சி மூலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த இருக்கின்றனர்.

3 நாட்கள் நடைபெறும் இப்பிரச்சாரப் பயணம் கோவை மாநகரம் மற்றும் மேட்டுப்பாளையம், காரமடை, பெ.நா.பாளையம், சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் நடக்க உள்ளது. பெண் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆறு பள்ளிகள் மற்றும் இரண்டு கல்லூரியில் பிரச்சார நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக விடியல் சமூக அமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தெரிவித்தார். மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று அங்கு வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் நிகழ்ச்சியைக் கண்டனர்.
