234 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க இருப்பதாக அ.ம.மு.க., துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
கோவை: வரும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க இருப்பதாக அ.ம.மு.க., துணை பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது கூட்டம் கொடிசியா மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் பங்கேற்க வந்திருந்த அக்கட்சியின் துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு கட்சி தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
கூட்டத்தில் அ.ம.மு.க.,வின் கோவை மாவட்ட செயலாளர் சேலஞ்சர் துறை பேசுகையில், "விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அந்த மாற்றம் டி.டி.வி. தினகரனால் மட்டுமே ஏற்படும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோட்டை கொங்கு மண்டலம்.

விரைவில் டி.டி.வி.தினகரன் முதலைமைச்சர் பதவியில் அமர்வதை பார்க்க தான் போகிறோம்." என்றார்.
தொடர்ந்து, அக்கட்சியின் அமைப்பு செயலாளர் செந்தில் பாலாஜி பேசுகையில், "தற்போது அமைச்சர்களாக இருக்கும் அனைவரும் பொதுச்செயலாளர் சசிகலா மூலமே சட்டமன்ற உறுப்பினர்கள் ஆனவர்கள். அவர் மூலமே அமைச்சர் ஆக்கப்பட்டவர்கள். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பின் கூவத்தூரில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.
கொங்கு மக்கள் துரோகம் செய்ய மாட்டார்கள். ஆனால் இன்று ஆட்சி பொறுப்பில் உள்ளவர்கள் ஜெயலலிதாவிற்கும் மக்களுக்கும் துரோகம் இழைத்து விட்டார்கள் என பேசியவர் தைரியமிருந்தால் ஆட்சியை கலைத்து விட்டு மக்களை சந்தித்து தேர்தல் மூலம் வெற்றி பெற்று காட்டவும்.
18 சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்க வழக்கில் மூன்றவது நீதிபதியின் தீர்ப்பு விரைவில் வர உள்ளது. அப்போது எங்கள் அணியில் உள்ள மேலும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்த்து 21 உறுப்பினர்களுடன் டி.டி.வி.தினகரன் தலைமையில் சட்டசபைக்குள் செல்வோம்." என்றார்.
இதன் பின்னர் டி.டி.வி. தினகரன் பேசுகையில், "இந்த கூட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த மாதம் எனது கட்சியை சேர்ந்த 6 பெண்கள் உட்பட 56 பேர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்த எடப்பாடி அரசுக்கு எங்களது பலத்தை நிரூபிக்க இந்த பொதுகூட்டம் இன்று நடைபெற்றது.
துரோகம் செய்தவர்கள் விரைவில் தங்களது பதவியை இழப்பார்கள்.
நாங்கள் மாமியார் வீட்டிற்க்கு செல்வோம் என்று இங்குள்ள அமைச்சர் கூறி வருகிறார்.
யார் மாமியார் வீட்டிற்க்கு செல்ல போகிறார்கள் என்பது விரைவில் தெரிய வரும்.
கடந்த 2002-ம் ஆண்டு தேர்தல் பணிக்காக துணி பேனர்களையும், கட்சி கொடியையும் திருப்பூரில் ஆர்டர் செய்தனர்.
அப்போது முன்னாள் திருப்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சிவசாமியுடன் சாக்கு மூட்டையில் அதனை கொண்டு வந்து என் வீட்டில் வைத்தவர் தான் இன்றைய சாக்கடை துறை அமைச்சர்.
அதேபோல், கடந்த 2001-ம் ஆண்டு நான் நினைத்திருந்தால் முதலமைச்சர் ஆகி இருக்கலாம்.
ஆனால், தற்போதைய துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை ஜெயலிதாவிடம் அறிமுகம் செய்து, அவரை முதலமைச்சர் ஆக்கியது நான் தான். அவர் அந்த நன்றிகளை மறந்துவிட்டார்.
வரும் தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது தொகுதியிலேயே வெற்றி பெற மாட்டர்.
கொங்கு மண்டல மக்கள் எங்கள் அணியின் பின்னால் என்பதை, இந்த கூட்டம் நிரூபித்துவிட்டது. மக்களுக்காக தான் திட்டங்களே தவிர, திட்டங்களுக்காக மக்கள் இல்லை.
தற்போது முட்டை ரூபத்தில் வெடிகுண்டுகள் வெடிக்க துவங்கி உள்ளது.
திருச்சங்கோடு மற்றும் நாமக்கல் மட்டுமல்லாமல் இனி தமிழகம் முழுவதும் இது போன்ற ரெய்டுகள் தொடரும்.
அடுத்து வரும் சட்டப்பேரவை தேர்தலில் 234 தொகுதிகளிலும் குக்கர் சின்னத்தில் நின்று வெற்றி பெற்று இரட்டை இலை சின்னத்தை மீட்போம்." என்றார்.
இதனைத்தொடர்ந்து, நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டது. கோவை மாவட்ட செயலாளர் சேலஞ்சர் துரை, தினகரனுக்கு வெள்ளி வீர வாளை வழங்கி கவுரவித்தார்.
இந்த பொதுக்கூட்டத்தில், ஆயிரகணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.