திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற இயற்கையோடு ஒன்றிய திருமணம், விழாவிற்கு வருகை புரிந்த அனைத்து தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்தது.
திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற இயற்கையோடு ஒன்றிய திருமணம், விழாவிற்கு வருகை புரிந்த அனைத்து தரப்பினரையும் வெகுவாகக் கவர்ந்தது.
இன்றைய நவீன காலத்தில் சூழ்நிலைக்கு ஏற்பவும், பொருளாதாரம் வளர்க்கவும், ஒன்றாய் இருந்த உறவினர்கள் அனைவரும் பல இடங்களில் பிரிந்து வாழும் சூழ்நிலை நிலவி வருகிறது. இவர்களை அனைவரையும் ஒன்றிணைப்பது சில முக்கிய விசேஷங்கள் மட்டுமே. அதில் முதலிடம் பிடிப்பது திருமணம் தான். அத்தகைய திருமணத்தை எவ்வாறு முன்மாதிரியாக நடத்தலாம் என திட்டமிட்ட திருப்பூரைச் சேர்ந்த குடும்பத்தினர் இயற்கை முறையில் திருமணத்தை நடத்தி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளனர்.

திருப்பூர் பின்னலாடை நிறுவன பின்புலம் கொண்ட லோகேஸ்வரன், கீதாஞ்சலி ரித்திகா நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு, இரு வீட்டாரும் பேசி தங்களுக்கு சொந்தமான நிலத்தில் திருமணத்திற்கு தேவையான காய்கறிகளை பயிரிட்டு, செயற்கை உரங்களை தவிர்த்து இயற்கையான முறையில் விவசாயம் மேற்கொண்டனர். அதில், விளைந்த காய்கறிகளை மட்டும் கொண்டு இவர்களது திருமண விருந்திற்கு உணவு தயாரித்துள்ளனர். அதேபோல, குடிநீரிலும் மாற்றத்தை கொண்டுவர எண்ணிய இவர்கள், மழை நீரை சேமித்து அதனையே சமையலுக்கும், திருமணத்திற்கு வந்தவர்களுக்கும் அருந்தக் கொடுத்தனர்.

மேலும், சிறுவர்களுக்குப் பனை நுங்கு வண்டி, பனை ஓலையால் செய்யப்பட்ட கைவினை பொருட்களை குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு கொடுத்து மகிழ்ந்தனர். நவீன விளையாட்டுகளில் திளைத்திருக்கும் இன்றைய குழந்தைகளுக்கு இந்த விளையாட்டு பொருட்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதுடன், விளையாட்டு ஆர்வத்தையும ஏற்படுத்தியது.

பிளாஸ்டிக் முழுமையாக தவிர்க்கப்பட்ட இந்த திருமணத்தில், சில்வர், செம்பு பாத்திரங்கள், மக்காச்சோள தட்டுகள் மட்டுமே தண்ணீர் மற்றும் உணவுகள் பரிமாறப் பயன்படுத்தப்பட்டது. அதேபோல, இயற்கைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு இயற்கை அங்காடிகள் மூலமாக மண்பாண்டங்கள், மூலிகை பொருட்கள், கைவினை பொருட்கள் என பலவிதமான பொருட்களின் விற்பனை அரங்குகளையும் ஏற்படுத்தியிருந்தனர்.

பெண் வீட்டார் சார்பில் மணமக்களுக்குக் காங்கேயம் இன பசு மற்றும் கன்று சீதனமாக வழங்கியது பாரம்பரியத்தை நினைவுட்டுவதாக அமைந்தது. இதுபோன்ற திருமணங்கள் பாரம்பரியம் மற்றும் இயற்கைப் பொருட்களின் மகத்துவத்தை உணர்த்துவதாகவும், இதுபோன்ற முயற்சிகள் வரும் காலங்களில் மாற்றத்தை ஏற்படுத்தும் என திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.