கோவை: விவசாயிகள் வஞ்சிக்கப்படாத வகையில் திட்டத்தை செயல்படுத்த ஆவண செய்ய வேண்டும் என பா.ஜ.க., தேசிய பொதுச்செயலாளரும், மேலிடப் பொறுப்பாளருமான முரளிதரராவ் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கோவை: விவசாயிகள் வஞ்சிக்கப்படாத வகையில் திட்டத்தை செயல்படுத்த ஆவண செய்ய வேண்டும் என பா.ஜ.க., தேசிய பொதுச்செயலாளரும், மேலிடப் பொறுப்பாளருமான முரளிதரராவ் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பா.ஜ.க.,விற்கு முக்கியமானது. அதுவும் தமிழகம் மிகவும் முக்கியமானது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளை செய்து வருகிறோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம் வகுக்க தேசிய தலைவர் அமித்ஷா வருகின்ற 9-ம் தேதி சென்னையில் பா.ஜ.க., தலைவர்களை சந்திக்க உள்ளார். அப்போது, 11 ஆயிரம் பா.ஜக., பிரதிநிதிகளையும் சந்தித்து கோரிக்கைகளைக் கேட்க உள்ளார். தமிழுக்கு இந்த அரசு முன் உரிமை கொடுத்து வருகிறது. தமிழின் பெருமையை அடையாளப்படுத்தி, அதற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
ஜி.எஸ்.டி.,யில் மத்திய, மாநில அரசுகள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மாநில அரசு ஜி.எஸ்.டி.,யால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை கொண்டு வரும் பட்சத்தில், நிச்சயம் தீர்வு கிடைக்கும். மத்திய அரசின் திட்டங்கள் மாநில அரசின் ஒத்துழைப்பு இருந்தால் தான் செய்ய முடியும். தேர்தலில் கூட்டணி வைத்து கொள்வதற்கு பா.ஜ.க., திறந்த மனதுடன் இருக்கிறது. தமிழகத்தில் புதிய அரசியல் சூழல் நிலவுவதால், பா.ஜ.க., வளர்ச்சியடைய இது தான் சரியான தருண. தமிழகத்தில் பா.ஜ.க., தலைமையை மாற்றுவதற்கு எந்தவித தேவையும் இல்லை.
தொழில்துறையினர் பாதிக்காத வகையில் ஜி.எஸ்.டி., கவுன்சில் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அனைத்துத் துறைகளுக்கும் குறிப்பாக சிறு, குறு தொழில்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மேலும், 8 வழிச் சாலை அமைக்கப்பட வேண்டும். அதற்காக விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது. விவசாயிகள் வஞ்சிக்கப்படாத வகையில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும். திட்டங்களை செயல்படுத்தும் போது போராட்டம் நடைபெறும். அதனால், விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் புரிய வைத்து திட்டங்களை செயல்படுத்த வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.