கலவரங்கள், படுகொலைகளுக்குக் காரணமாக இருக்கும் வதந்தியான செய்திகள் பரவுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
கலவரங்கள், படுகொலைகளுக்குக் காரணமாக இருக்கும் வதந்தியான செய்திகள் பரவுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
சமூக வலைதளங்களில் முதன்மை இடத்தை வகிக்கும் பேஸ் புக், வாட்ஸ் அப் போன்ற செயலிகள் மூலம் சமீபகாலமாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக, சாதி பாகுபாடு தாக்குதல், பசுவதை, குழந்தைகளைக் கடத்தும் கும்பல் போன்ற விஷமியான தகவல்களால் நாட்டின் பல பகுதிகளில் வன்முறை சம்பவங்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில், வதந்தி சார்ந்த வன்முறைகள் பரவுவதை தடுக்க வேண்டும் என வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- வாட்ஸ் அப் செயலியில் பரப்பப்படும் பொறுப்பற்ற, உணர்வுகளை தூண்டிவிடக் கூடிய, ஆத்திரமூட்டும், வதந்தியான தகவல்களால் சமீபகாலமாக அசாம், மகாராஷ்டிரா, கர்நாடகா, திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற படுகொலை சம்பவங்கள் வேதனைக்கும், வருத்தத்துக்கும் உரியதாக உள்ளது.
நல்ல நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட செயலிகளை சில சமூகவிரோதிகள் தவறாகப் பயன்படுத்தி வன்முறைக்கு வித்திட்டு வருகின்றனர். இதில் தங்களுக்கான பொறுப்பை இந்த செயலி நிறுவனம் தட்டிக் கழித்துவிட முடியாது. இதைப்போன்ற தகவல்கள் பரவுவதை உரிய சாதனங்களின் மூலம் உடனடியாக தடுத்தாக வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த கோரிக்கையை ஏற்று வாட்ஸ் அப் நிறுவனமும், வதந்தியான செய்திகள் பரவுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளது.