கோவை: மேட்டுப்பாளையத்தில் நான்கு ஆண்டுகளாக திறக்கப்படாமல் மூடியே கிடக்கும் குளிர்பதன கிடங்கினை பயன்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: மேட்டுப்பாளையத்தில் நான்கு ஆண்டுகளாக திறக்கப்படாமல் மூடியே கிடக்கும் குளிர்பதன கிடங்கினை பயன்பாட்டிற்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அறிவொளி நகர் அருகே தமிழக அரசின் வேளாண்மை விற்பனை மற்றும் வணிக வரித்துறை சார்பில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் ரூ. 3.60 கோடி செலவில் விவசாயிகளுக்கான காய்கறி குளிர்பதன கிடங்கு அமைக்கப்பட்டது. கோவை மற்றும் நீலகிரி மாவட்ட விவசாயிகள் தங்களுக்கான காய்கறி, பழங்கள் போன்ற பொருட்களை இங்கு இருப்பு வைத்து, அதனை நல்ல விலைக்கு விற்பனை செய்யும் நோக்கத்தில் இந்தக் கிடங்கு துவங்கப்பட்டது.
மேலும், பொருட்களை இங்கேயும் விற்பனை செய்வதற்காக வணிக வளாக கட்டிடங்கள், தரம் பிரிப்பு மையம், ஏலக் கொட்டகை என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. இருப்பினும், இந்த கட்டிடம் கட்டப்பட்டு 4 ஆண்டுகள் ஆகிய பின்னரும், இதனைத் திறக்க அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காத காரணத்தால், இந்த குளிர்பதன கிடங்கு தற்போது வரை விவசாயிகளுக்கு எவ்வித பலனுமின்றி மூடியே கிடக்கின்றன. இதனால், தங்களது விளை பொருட்களை தனியார் கிடங்குகளுக்கு கொண்டு சென்று அதிக விலை கொடுத்து இருப்பு வைக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

அத்துடன் கோடி கணக்கில் செலவு செய்து விவசாயிகளுக்காகக் கட்டப்பட்ட இந்த வளாகம், பராமரிப்பு இன்றி காணப்படுவதுடன் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக காணப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனிடையே, ஏற்கனவே கட்டிமுடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருக்கும் இந்த வளாகத்தினுள், தற்போது காய்கறி மற்றும் பழங்கள் சார்ந்த தரம் பிரிப்பு மையம், பேக்கிங் மையம் ஆகியவற்றுக்காக தொடர் மேலாண்மை திட்டத்தின் மூலம், மேலும் இரண்டு கோடிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை நடத்தியுள்ளனர்.

ஏற்கனவே, கட்டி முடித்ததையே பயன்பாட்டிற்கு கொண்டுவராமல், மேலும் அதற்கான கட்டமைப்பினை விரிவுபடுத்துவதால் யாருக்குப் பயன் என கேள்வி எழுப்பும் விவசாயிகள், மூடிக்கிடக்கும் இந்த குளிர்பதன கிடங்கினை திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.