கோவை: சிங்காநல்லூர்-ராமநாதபுரம் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தை மதிக்காமல், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளை நிறுத்திய தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
கோவை: சிங்காநல்லூர்-ராமநாதபுரம் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தத்தை மதிக்காமல், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளை நிறுத்திய தனியார் மற்றும் அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.
மாநகர பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், போக்குவரத்து நெரிசல் ஏற்படக் காரணமான காரணிகள் போக்குவரத்து போலீசார் சரி செய்து வருகின்றனர்.
நெரிசலை ஏற்படுத்தும் முக்கியமான காரணிகளுள் ஒன்றாக இருப்பது பேருந்து ஓட்டுனர்கள் அதற்கேற்ற இடங்களில் பேருந்துகளை நிறுத்தாமல் இருப்பது தான். இது குறித்து சிம்ப்ளிசிட்டி கடந்த வாரம் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று சிங்காநல்லூர் பேருந்து நிறுத்தத்தை மதிக்காமல், சிக்னல் அருகிலேயே பேருந்தை நிறுத்தும் ஓட்டுனர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.
சிங்காநல்லூர்-ராமநாதபுரம் சாலையில் அமைந்துள்ள சிக்னலுக்கு அடுத்து பேருந்து நிறுத்தம் உள்ளது. ஆனால், பேருந்து ஓட்டுநர்கள் சிக்னலுக்கு அருகிலேயே பேருந்துகளை நிறுத்துகின்றனர். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிப்புகள் அதிக அளவில் ஏற்படுகிறது.
காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள அந்தப் பகுதியில், பேருந்து ஓட்டுநர்களின் விதிமீறல்களால் விபத்துகள் ஏற்படுகின்றன.
அவ்வாறு விதிமீறலில் ஈடுபடும் பேருந்து ஓட்டுனர்களுக்கு இன்று அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது.
இது குறித்து, சிங்காநல்லூர் காவல் நிலைய துணை ஆய்வாளர் (போக்குவரத்து) முருகன் கூறுகையில், "இன்று காலை முதல் அபராதம் விதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. முன்னதாக, குறிப்பிட்ட இடத்தில் பேருந்தை நிறுத்தக்கூடாது என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதனை மீறியும் பேருந்தை அதே இடத்தில் நிறுத்தும் ஓட்டுனர்களுக்கு தலா ரூ.500 அபராதம் வசூலிக்கப்படுகிறது. தற்போது வரை பத்து தனியார் பேருந்து ஓட்டுநர்களுக்கும், மூன்று அரசு பேருந்து ஓட்டுனர்களுக்கு அபராதம் விதித்துள்ளோம்." என்றார்.