கோவை: விமான நிலைய விரிவாக்கத்தில் இழப்பீடு முறையாக தரவில்லை எனக்கூறி போராட்டம் நடத்தி வந்த இருகூரை சேர்ந்த செந்தில்ராஜ், ஜெயபிரகாஷ் ஆகியோரை பீளமேடு போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை: விமான நிலைய விரிவாக்கத்தில் இழப்பீடு முறையாக தரவில்லை எனக்கூறி போராட்டம் நடத்தி வந்த இருகூரை சேர்ந்த செந்தில்ராஜ், ஜெயபிரகாஷ் ஆகியோரை பீளமேடு போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை சர்வதேச விமான நிலையமானது 600 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு 9 ஆயிரம் அடி ஓடு பாதையில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சரக்கு விமானங்களும், சர்வதேச விமானங்களும் அதிக அளவில் இயக்க 12 ஆயிரம் அடி ஓடு பாதைகள் தேவைப்படுகிறது.
நிலம்
இதனால், கடந்த 2010-ம் ஆண்டு முதல் விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக நிலங்களை கையகப்படுத்த பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஒரு பகுதியாக 624 ஏக்கர் நிலங்கள் விமான நிலையத்தை ஒட்டியுள்ள சின்னையம்பாளையம், இருகூர், நீலம்பூர், நீலிக்கோணாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வு செய்யப்பட்டன. இதில் 461 ஏக்கர் பட்டா நிலங்கள், 28 ஏக்கர் பயன்படுத்தப்படாத புறம்போக்கு நிலங்கள், முப்படைகளுக்கு சொந்தமான 134 ஏக்கர் நிலங்கள் அடங்கும்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு கூடுதல் தலைமை செயலரும், நில நிர்வாக ஆணையருமான மோகன் பியாரே நிலங்கள் கையகப்படுத்தும் இடங்களுக்கு அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். அவரிடம் அப்பகுதி விவசாயிகள், மக்கள் உரிய விலை நிர்ணயம் செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுக்கள் அளித்தனர்.
சேலம் - சென்னை பசுமை வழிச்சாலை திட்டத்திற்கு அதிக இழப்பீடு தொகை அறிவித்துள்ளது போலவே அதிக இழப்பீடு தொகை வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.
கைது
இந்தநிலையில், இருகூர் பகுதியை சேர்ந்த ஜெயபிரகாஷ் மற்றும் செந்தில்ராஜ் ஆகியோர் நிலங்களுக்கு ஏற்ப முறையான இழப்பீடுகள் வழங்கவில்லை என பொதுமக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ததாக தெரிகிறது. இதனால் இருவர் மீதும், அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம் வழங்கியது, மக்களை தூண்டிவிட்டது போன்ற பிரிவுகளில் பீளமேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜெயபிரகாஷ் பா.ஜ.க.,வை சார்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் கோவையில் சமீபத்தில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் ஏற்பட மோதலின் போது கைது செய்யப்பட்டு முன் ஜாமின் பெற்றவர் ஆவார்.
தமிழகத்தில் எட்டு வழிச்சாலைக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களை அரசு தீவிரமாக கண்காணித்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் நிலையில், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு இழப்பீடு கேட்டு போராடுபவர்களை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.