கோவை: கோவை மதுக்கரை அருகே கேரள தொழிலதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி 1.5 லட்சம் பணம் மற்றும் காரை கொள்ளையடித்த கும்பல் மீண்டும் காரை பச்சாபாளையம் அருகே நிறுத்திவிட்டுச் சென்றனர்.
கோவை: கோவை மதுக்கரை அருகே கேரள தொழிலதிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி 1.5 லட்சம் பணம் மற்றும் காரை கொள்ளையடித்த கும்பல் மீண்டும் காரை பச்சாபாளையம் அருகே நிறுத்திவிட்டுச் சென்றனர்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாகவே பைபாஸ் சாலைகளில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதேபோல காரை பின் தொடர்ந்து வந்து கத்தி போன்ற ஆயுதங்களைக் காட்டி காரையும் காரில் உள்ளவர்களிடம் உள்ள பணம் மற்றும் நகைகளைக் கடத்தும் கும்பலின் அட்டகாசங்களும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இன்று திருச்சூரில் ஹார்டுவேர் கடை நடத்தி வரும் கான்சிங், பொருட்களை கொள்முதல் செய்ய அதிகாலை காரில் கோவை வந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து மற்றொரு காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கான்சிங் காரை மறித்து கத்தியை காட்டி 1.5 லட்சம் பணம் மற்றும் காரை பறித்துச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மதுக்கரை போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று மாலை கொள்ளையர்களால் கடத்தப்பட்ட காரானது பச்சாபாளையம் அருகே நின்று கொண்டிருந்தது. இந்த தகவலை அறிந்த போலீசார் காரை கைப்பற்றி கைரேகை ஆய்வுகள் செய்தும் அதேபோல கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.
பைபாஸ் சாலைகளில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர், இரவு நேரங்களிலும் அதிகாலை நேரங்களிலும் வாகன தணிக்கைகள் செய்ய வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.