சேலம்: எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக விவசாய நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளிடம், கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வதாக பெண் ஒருவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம்: எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக விவசாய நிலத்தை அளக்க வந்த அதிகாரிகளிடம், கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வதாக பெண் ஒருவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை - சேலம் எட்டு வழி சாலைக்காக ஐந்து மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களை அரசு கைப்பற்றி வருகிறது. மேலும், எட்டு மலைகள் அழிக்கப்படவுள்ளதாக கூறப்பட்டு வருகின்றது.
எதிர்ப்பு
விவசாய நிலங்களை அழித்து எட்டு வழிச்சாலை அமைப்பதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் இந்த சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல நூறு விவசாயிகளின் வாழ்வாதாரங்களை அழித்தும், இயற்கை வளங்களை அழித்தும் வரும் வளர்ச்சி தேவை இல்லை என்றும் குற்றம்சாட்டி பல்வேறு தரப்பினரும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், செய்யாறு அருகே கீழ் கொளத்தூரில் நிலம் அளவிடும் பணிக்காக வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்தனர். அப்போது அங்கிருந்த மக்கள் நிலம் அளவீடும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் திரும்பி சென்றனர்.
கழுத்தை அறுத்துக்குவேன்
இதனைத் தொடர்ந்து, செய்யாறில் உள்ள எருமைவெட்டி கிராமத்தில் நிலம் அளவீடு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த நிலத்தில் கற்கள் நடும் பணிகள் நடைபெற்றன. இதையறிந்து அங்கு விவசாயிகள் ஒன்று கூடினர். அப்போது அந்த நில உரிமையாளரின் மகள் நிலத்தை அளவிட எதிர்ப்பு தெரிவித்தார்.
மேலும், பிளேடை கழுத்தின் அருகில் வைத்துக்கொண்டு, "நிலத்தை அளக்காதீங்க. உடனே அந்த கல்லை எடுங்க. இல்லேன்னா கழுத்தை அறுத்துக்குவேன். எங்களுக்கு விவசாயம் தான் முக்கியம்." என்று பலமுறை கதறினார்.
ஆனால், அதிகாரிகள் அதை பொருட்படுத்தியதாய் தெரியவில்லை. மாறாக அங்கிருந்த போலீசார் அந்த பெண்ணிடம் இருந்து பிளேடை பறிக்க முயன்றனர். இந்த சலசலப்பில், சற்றும் எதிர்பாராதவிதமாக அந்த பெண் கழுத்தை அறுத்துக் கொண்டார். இதையடுத்து ரத்தம் கொட்டியதால் அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.