கோவை: வன்கொடுமை சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி கோவை ரயில்நிலையத்தை முற்றுகையிட முயன்ற சி.பி.எம்., கட்சியினர் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கோவை: வன்கொடுமை சட்ட திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி கோவை ரயில்நிலையத்தை முற்றுகையிட முயன்ற சி.பி.எம்., கட்சியினர் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி கோவை ரயில் நிலையம் முன்பு சி.பி.எம்., கட்சியினர் ஜி. ராமகிருஷ்ணன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள், தந்தை பெரியார் திராவிட கழகம் உள்பட பல்வேறு அம்பேத்கரிய, பெரியாரிய அமைப்புகள் கலந்து கொண்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் பேசுகையில் "கடந்த 4 ஆண்டுகால ஆட்சியில் தலித்துகள் மீதான வன்கொடுமை 66 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 15 நிமிடங்களுக்கு ஒருமுறை வன்கொடுமை நடைபெற்று வருகிறது. பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி ஒருவர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இருந்தால், முதலில் காவல்துறை கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்ற பின்பு தான் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளது. அவர் அரசு அதிகாரியாக இருப்பின், அவரது உயரதிகாரியிடம் அனுமதி பெற்ற பின்னர் தான் கைது செய்ய வேண்டும். நீதிமன்றம் கருதினால் பதியப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் அளிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, தலித்துகள் மீதான வன்கொடுமை நாட்டில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.
எனவே, உச்சநீதிமன்றம் அரசியல் சாசனப்படி இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில், எங்களது போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும். இதயத்தில் மீதான ஒடுக்குமுறையும் தாக்குதலும் பா.ஜ.க., ஆட்சியில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளது. எனவே, உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அரசியல் சாசனத்தில் உள்ள ஒன்பதாவது பிரிவை திருத்தம் செய்ய வேண்டும்," என்றார்.
இதைத்தொடர்ந்து, பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், போலீசார் போராட்டக்காரர்களை ரயில் நிலையம் உள்ளே செல்ல முடியாதவாறு தடுத்து நிறுத்தினர். இதனிடையே, போலீசார் அவர்களை தரதரவென இழுத்து கீழே தள்ளினர்.

அப்போது, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் கீழே விழுந்து மயக்கம் அடைந்தார். இதனால், சிறிது நேரம் ரயில் நிலையம் முன்பாக பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரயில் நிலையம் முன்பாக தரையில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். பின்னர், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஜி.ராமகிருஷ்ணன் உட்பட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல, உதகையில் விடுதலை சிறுத்தை கட்சியினர், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தமிழ் புலிகள் அமைப்பினர் ரயில்மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால், அவர்களை நுழைவு வாயிலிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களை ரயில்நிலையத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

மேலும், போராட்டம் செய்தவர்களை கைது செய்து, வாகனத்தில் ஏற்ற போலீசார் முற்பட்டனர். அப்போது, இருதரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர், 3 பெண்கள் உட்பட 57 பேர் கைது செய்யப்பட்டு, அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கான வன்கொடுமை சட்டத்தில் உச்சநீதிமன்றம் கொண்டு வந்துள்ள சட்டதிருத்தம் சமுக நீதியைத் தகர்க்கும் வகையில் இருப்பதாகக் கூறி திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வன்கொடுமை சட்டத்திற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றிட வேண்டும் என வலியுறுத்தி இடதுசாரி மற்றும் தலித் அமைப்புகள் இணைந்து ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். மேலும், மத்திய அரசைக் கண்டித்து கண்டன கோஷங்களோடு, ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
